vaali movie issue

1999-ஆம் ஆண்டு அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான 'வாலி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் எஸ். எஸ். சக்கரவர்த்தியிடம் இருந்து போனி கபூர் வாங்கியிருந்தார். இதனிடையே எஸ்.ஜே சூர்யா, கதையாசிரியருக்கே படத்தை ரீமேக் செய்ய உரிமை உண்டு. எனவே வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம், 'வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போனி கபூருக்கு எந்த தடையும் இல்லை' என இடைக்கால உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியது. இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் எஸ்.ஜே.சூர்யா.

Advertisment

அந்த மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மூல வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து திரைப்படத்திற்கான உரிமையை எஸ்.ஜே.சூர்யா கோர முடியும் என தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

Advertisment

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் எஸ்.ஜே.சூர்யாவின் சாட்சியத்தை பதிவு செய்ய மாஸ்டர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி முன்பு எஸ்.ஜே.சூர்யா நேரில் ஆஜராகி இரண்டரை மணிநேரம் சாட்சியம் அளித்தார் குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது..

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் 4 வது மாஸ்டர் நீதிமன்றத்தின் நீதிபதி கின்ஸ்லி கிறிஸ்டோபர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், இன்று எஸ்.ஜே.சூர்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்து விட்டதால், எஸ்.ஜே சூர்யாவிடம் குறுக்கு விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் என மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.