உத்தரபிதேசத்தில் ஒரு கணவன் அவரது மனைவியை நடிகை நோரா ஃபதேகி போல் உடலமைப்பு வேண்டும் என கொடுமைப் படுத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண், முராத்நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், “என் கணவர் பெயர் சிவம் உஜ்வால். அவருக்கும் எனக்கும் கடந்த மார்ச் 6ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.24 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா ஸ்கார்பியோ காரும், ரூ.10 லட்சம் ரொக்கத்தையும் கொடுத்தோம். இருப்பினும் வரதட்சணை கேட்டு எனது மாமியார் துன்புறுத்தினார். அதை நான் கொடுக்காததால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்தினர். என் கணவருக்கு பெண்கள் மீது ஆர்வம் அதிகம். ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பார்ப்பார். அவர் அரசு உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கிறார். நான் சாதாரண உயரமும், வெள்ளை நிறமுமாக இருப்பேன். ஆனால் என்னுடைய கணவரும் மாமியாரும் என் உடல் தோற்றத்திற்காகத் தொடர்ந்து கேலி செய்து வந்தனர்.
என் கணவர், என்னை நடிகை நோரா ஃபதேகி போல் பார்க்க விரும்புவதாக கூறி தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வற்புறுத்தினார். நானும் வேறுவழியில்லாமல் செய்தேன். அப்படி செய்யும் போது, எதாவது ஒரு நாள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் உடல் எடை கூடிவிடும் என்பதற்காக சாப்பாடு கொடுக்கமாட்டார். நான் கர்ப்பமான போது கூட தனக்கு ரகசியமாக கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்தார். இது அவர் கொடுத்த மாத்திரை குறித்து ஆன்லைனில் தேடிய போது தான் தெரிய வந்தது.
அவரை திருமணம் செய்தவுடன் என் வாழ்க்கை பாலாகிவிட்டது. அவர் பேசாமல் நோரா ஃபதேகி போல் ஒரு பெண்ணையே திருமணம் செய்திருக்கலாம்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் மற்றும் மைத்துனி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர் நோரா ஃபதேகி. தமிழில் பாகுபலி படத்தில் ‘மனோகரி’ பாடலுக்கும் தோழா படத்தில் ‘டோர் நம்பர்’ பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார்.