Skip to main content

“மனிதாபிமானமற்ற வதந்திகள்” - உன்னி முகுந்தன் விளக்கம்

Published on 28/05/2025 | Edited on 28/05/2025
Unni Mukundan has explained the allegations made by his former manager

மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் உன்னி முகுந்தன். ஆனால் தமிழ் சினிமாவில் தான் திரைத்துறையில் அறிமுகமாகியிருந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூரி நடித்த கருடன் படத்தில் நடித்தார். 

இந்த நிலையில் உன்னி முகுந்தன் மீது அவரது மேலாளர் விபின் குமார் என்பவர் புகார் கொத்திருந்தார். காவல் துறை உட்பட பல்வேறு திரையுலகம் சார்ந்த சங்கங்களிலும் கொடுத்திருந்தார். அந்த புகாரில், உன்னி முகுந்தன் தன்னை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மார்கோ படத்திற்குப் பிறகு, உன்னி முகுந்தனுக்கு கஷ்டமான காலம் வந்தது. பல படங்கள் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டன. அதோடு உன்னி முகுந்தன் இயக்குநராக அறிமுகமாகவிருந்த படத்தில் இருந்து அதன் தயாரிப்பு நிறுவனமான கோகுலம் மூவிஸ் வெளியேறியதால் அந்த படமும் கைவிடப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சிக்குள்ளானார். மேலும் விரக்தியில் இருந்தார். 

நான் கடந்த 18 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். பல படங்களுக்கு பி.ஆர்.ஓ. பணிகளையும் கவனித்து வருகிறேன் அந்த வகையில் டொவினோ தாமஸின் நரிவேட்டை படத்தின் பி.ஆர்.ஓ.-வாக படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படத்தை பாராட்டி எனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டேன். ஆனால் அது உன்னி முகுந்தனுக்கு பிடிக்கவில்லை. நான் பதிவிட்ட அன்று இரவே எனக்கு போன் செய்து மேலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சொன்னார். நான் சரி என்று சொன்னேன். அதன் பிறகுதான் அவர் நேரில் வந்து என்னை கார் பார்க்கிங்கிற்கு வர சொல்லி தகாத வார்த்தையில் திட்டி தாக்கினார். நான் உன்னி முகுந்தனிடம் 6 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். இதுபோன்ற அனுபவத்தை நான் எதிர்கொண்டதே இல்லை” என்றார். இவரது புகாரின் அடிப்படையில் 

இந்த புகாரின் அடிப்படையில் உன்னி முகுந்தன் மீது கொச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது உன்னி முகுந்தன், தன் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “2018 ஆம் ஆண்டு எனது சொந்த தயாரிப்பில் எனது முதல் படத்தைத் தயாரிக்கவிருந்தபோது விபின் குமார் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் ஒருபோதும் எனது தனிப்பட்ட மேலாளராக நியமிக்கப்படவில்லை. அவர் எனது அனைத்து டிஜிட்டல் டேட்டாக்களையும் கவனித்து வந்ததால், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கும்படி கேட்டேன். ஆனால் அவர் அனுப்பவில்லை. பதிலாக எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். என்னைப் பற்றி மனிதாபிமானமற்ற வதந்திகளைப் பரப்பி வருகிறார்.” எனக் குறிப்பிட்டு மூன்று பக்க செய்தி குறிப்பை பகிர்ந்திருந்தார்.

சார்ந்த செய்திகள்