Skip to main content

''முன்னணி நடிகர்கள் பெப்சிக்கு உதவியது போல் நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும்'' - நடிகர் உதயா வேண்டுகோள்

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


கரோனா தொற்று உலகிற்கே பேரிழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், கலையுலகமும் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கும், பெப்சி போன்ற கலையுலக அமைப்புகளுக்கும் உதவி வருகின்றனர். இந்நிலையில் அமைப்பு சாரா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் உதவும் வகையில், நடிகர் சங்கத்திற்கும் தாராளமாக நிதி வழங்கிடுமாறு நடிகர் உதயா வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்....

 

dgd



''அன்பார்ந்த என் திரையுலக நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் உங்கள் அன்பன் உதயாவின் பணிவான கோரிக்கை.. இன்று கரோனா வைரஸின் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் நிற்பது தாங்கள் அறிந்ததே... உலகப் பிரபலங்களில் பில்கேட்ஸ்லிருந்து நமது நாட்டு அம்பானி, அதானி வரை பலர், பல லட்சம் கோடிகள் இழப்புக்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்று ஊடகத்தின் வாயிலாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.. அதேசமயம் கரோனாவால் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கால் அன்றாடச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் எத்தனையோ பேர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பசிக்கும், பட்டினிக்கும் பரிதவிக்கும் பரிதாப நிலையும் இங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்... 

 

இருந்தாலும் அது எந்த அளவுக்குப் போதுமானது என்றே தெரியவில்லை... பல தொழில்களைப் போல் திரைப்படத் தொழிலும் இதில் விதிவிலக்கல்ல. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்குப் பல முன்னணி நடிகர்கள் பல உதவிகளைச் செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. அதேசமயம் முன்னணி நடிகர்கள் செய்திருக்கும் உதவிகள் பெப்சி அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே சென்றடையும். பெப்சி அமைப்பில் சேராத தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 3300 பேரில் 2500 பேர் துணை நடிகர்களாகவும் நாடக நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் படப்பிடிப்பிற்கோ, அல்லது நாடக அரங்கிற்கோ சென்றால் மட்டுமே சம்பளம் கிடைக்கும். அந்த வருமானத்தில் தான் அவர்கள் குடும்பத்தை வழிநடத்த முடியும். இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த ஊரடங்கால்.. துணைநடிகர்களும், நாடக நடிகர்களும் கரோனாவால் ஏற்படும் பாதிப்பை விட பசி பட்டினியால் தான் அதிகம் பாதித்து உள்ளார்கள். 

 

http://onelink.to/nknapp


இந்தச் சூழ்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவிகள் கிடைக்க நடிகர் சங்கத் தனி அதிகாரியின் ஒத்துழைப்பின் பேரில்,திரு ஐசரி கணேஷ், திரு கார்த்தி, திரு நாசர்,  திரு பொன்வண்ணன், திருமதி குட்டிபத்மினி, திரு பூச்சி முருகன், திரு சூரி மற்றும் பல நல்ல  உள்ளம் படைத்த நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற பண உதவி அளித்துள்ளார்கள். அதன்படி வந்திருக்கும் தொகையோ 15 லட்சத்திற்கு தான் இருக்கிறது. அதோடு பலரின் சிறு உதவியால் எங்களால் முடிந்த, கஷ்டப்படும் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு போன்றவற்றை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் அனைவருக்கும் உதவிட பற்றாக்குறை இருக்கிறது. ஆகவே தயவுகூர்ந்து பிரபல முன்னணி நடிகர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்... நடிகர் சங்க உறுப்பினர்களின் பசியைப் போக்க அவர்களின் குடும்பங்கள் பட்டினி இருளிலிருந்து விலக... பெப்ஸி தொழிலாளர்களுக்கு அளித்தது போல் நடிகர் சங்கத்திற்கும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 

இப்படிக்கு ,
உங்கள் உதயா'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சம்பளத்தில் 40% குறைத்த உதயாவிற்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020
bdgd

 

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதைச் சரி செய்யும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் உதயா ஆகியோர் தாங்களாக முன்வந்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தனது சம்பளத்தில் 40% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நடிகர் உதயாவிற்கு அக்னி நட்சத்திரம் பட தயாரிப்பாளர் மணிகண்டன் சிவதாஸ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... 

 

''மே 8, 2020

 

அன்புள்ள திரு உதயா,

 

உங்கள் சிந்தனைக்கு நன்றி. உங்கள் சம்பளத்தை 40% வரை குறைக்கும் உங்கள் சரியான நேர நடவடிக்கைக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளரின் நலனில் அக்கறை கொண்டு துறையின் நெருக்கடிகளை முன்கூட்டியே அறிந்து, அதற்கு தகுந்தாற்போல்  வேலை செய்யும் திறன் உங்களுக்கு உள்ளது. எங்கள் திட்டத்திற்கு நீங்கள் காட்டிய இரக்கம் முழுத் தொழிலுக்கும் ஒரு உத்வேகம். தொற்றுநோய்களின் இந்த கடினமான சூழ்நிலையையும், முதலீட்டாளரின் பார்வையில் தொழில்துறையின் வீழ்ச்சியையும் நீங்கள் எவ்வாறு எதிர்நோக்குகிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறு தயாரிப்பாளர்களின் வாழ்க்கையிலும், மற்றும் தொழில்துறையிலும் இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் உங்கள் தன்னார்வ நடவடிக்கைக்கு மீண்டும் நன்றி.

 

அன்புடன்.

 

மணிகண்டன் சிவதாஸ்
திரைப்பட தயாரிப்பாளர்
(அக்னி நட்சத்திரம்)'' என குறிப்பிட்டுள்ளார்.


 

Next Story

''அவர்களைப்போல் செய்வதில் நானும் பெருமை கொள்கிறேன்'' - நடிகர் உதயா அறிவிப்பு!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020
hdsh

 

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதைச் சரி செய்யும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி ஆகியோர் தாங்களாக முன்வந்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் உதயாவும் தனது சம்பளத்தில் 40% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

 

''வணக்கம்.

 

தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம். மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த கரோனா வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும். நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "அக்னி நட்சத்திரம்" திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது இந்த கரானாவின் தாக்கத்தால். ஒட்டுமொத்த திரைஉலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன். அதேபோல் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கும் "மாநாடு"படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் அந்த படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40% சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன். இதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி போன்றோர் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்க அதே போல் நானும் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் பெருமைகொள்கிறன். நன்றி.

 

அன்புடன்,
நடிகர் உதயா'' என குறிப்பிட்டுள்ளார்.