''முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என வரலாற்றில் நாம் படித்திருக்கிறோம். ஒரு முல்லைக் கொடி படர்வதற்கு வழியில்லாமல் தரையில் தவழ்ந்து வாடிக் கொண்டிருப்பதை கண்டு மனமுருகி அது படர்வதற்கும், உயிர் பிழைப்பதற்கும் தனது தேரையே அதற்கு அர்ப்பணித்தான் முல்லைவேந்தன். அதுபோல் இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும், நடன கலைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், அமைப்புசாரா மற்ற தொழிலாளர்களுக்கும் ரூபாய் 3 கோடியை வாரி வழங்கியது மட்டுமில்லாமல், இன்னும் சில திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், நிதி உதவி வழங்கிய வள்ளல் எங்கள் மாஸ்டர் திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள், ஃபெப்சி அமைப்பில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அங்கம் இல்லாததால் அவர்களுக்கு தான் செய்த உதவி போய் சேரவில்லை என்று அறிந்து, மனம் உருகி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நலிந்த நடிகர்கள், நாடக நடிகர்களுக்கு ரூபாய் 25 லட்சத்தை அளித்து, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது, கொடுக்கும் மனம் இருக்கவேண்டும். திரைத்துறையை சார்ந்தவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றிவைத்த ஒளிவிளக்கு. கொடுத்து சிவந்த கை, எங்கள் கருப்பு வைரம் திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்.
அன்பன்
நடிகர் உதயா'' என குறிப்பிட்டுள்ளார்.