Skip to main content

''அவர்களைப்போல் செய்வதில் நானும் பெருமை கொள்கிறேன்'' - நடிகர் உதயா அறிவிப்பு!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020
hdsh

 

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதைச் சரி செய்யும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி ஆகியோர் தாங்களாக முன்வந்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் உதயாவும் தனது சம்பளத்தில் 40% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

 

''வணக்கம்.

 

தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம். மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த கரோனா வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும். நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "அக்னி நட்சத்திரம்" திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது இந்த கரானாவின் தாக்கத்தால். ஒட்டுமொத்த திரைஉலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன். அதேபோல் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கும் "மாநாடு"படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் அந்த படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40% சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன். இதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி போன்றோர் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்க அதே போல் நானும் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் பெருமைகொள்கிறன். நன்றி.

 

அன்புடன்,
நடிகர் உதயா'' என குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்