/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/55_89.jpg)
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் தமிழ் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. மேலும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு திருமாவளவன் எம்.பி., சீமான், சேரன் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக படக்குழுவினருக்கு உணவு விருந்து வைத்தார் விக்ரம். இப்படத்தை மகாராஷ்டிராவில் முதல் முறையாக 16 கிராமத்தை சேர்ந்த 200 பழங்குடியின பெண்கள் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் இதுவரை வெளியாகாத நிலையில் அதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் இப்படத்தை ஓ.டி.டி.-யில் வெளியிடத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் தாக்கல் செய்த நிலையில், “புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவம் குறித்து நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன. இந்தப் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)