trisha to play a heroine in dhanush 50th movie

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதிஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

இதனிடையே தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார் எனவும் காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், நடிகர் சந்தீப் கிஷனும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லபடுகிறது. இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் இரண்டாவது முறையாக தனுஷுக்கு ஜோடியாவார் த்ரிஷா. முன்னதாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த 'கொடி' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதற்கு முன்னதாக தனுஷின் 'ஆடுகளம்' படத்தில் முதலில் த்ரிஷா தான் கமிட்டாகியிருந்தார். டெஸ்ட் ஷூட்டும் நடந்தது. பின்பு சில காரணங்களால் தொடர முடியாத நிலையில் டாப்ஸி நடித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

த்ரிஷா தற்போது விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் 'தி ரோட்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.