Skip to main content

“தனிப்பட்ட முறையில் த்ரிஷாவை விமர்சிக்கவில்லை” - மன்சூர் அலிகான் பேட்டி

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

trisha issue mansoor ali khan press meet after investigation

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

 

ad

 

இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார். 

 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எனத் தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்து வந்தது. பின்பு மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் கொடுத்தனர். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராகவில்லை எனக் குறிப்பிட்டு நாளை ஆஜராக அனுமதி வழங்க காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். 

 

இந்த நிலையில் திடீரென்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு ஆஜராக வருகை தந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் முன் விளக்கமளித்தார். அதை எழுத்து பூர்வமாக காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 45 நிமிடம் இந்த விசாரணை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களிடம் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “தனிப்பட்ட முறையில் த்ரிஷாவை விமர்சிக்கவில்லை. ஒரு நடிகையாக அவரை நான் ரொம்ப மதிக்கிறேன்” என்றார். 

 

மேலும் போலீஸாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், “நான் ஜாலியாகத் தான் பேட்டி கொடுத்தேன். த்ரிஷா அதை தவறாக புரிந்து கொண்டார். நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தமடைந்திருந்தால் நானும் மன வருத்தமடைகிறேன். நான் நாளை தான் ஆஜராகவிருந்தேன். ஆனால் நான் தலைமறைவாகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி வெளியானது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதற்காக தான் இன்றே ஆஜரானேன். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஆஜராக தயராக உள்ளேன்” எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்