சூர்யா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா, தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முன்னேறினார். அதே சமயம் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என அனைவருடனும் நடித்துவிட்டார். இதனிடையே மற்ற தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தி பிரபல நடிகையாக வலம் வந்தார்.
இடையில் சற்று மார்க்கெட் குறைந்த நிலையில் இருந்த த்ரிஷா, பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு மீண்டும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று மார்க்கெட் உள்ள நடிகையாக மாறினார். இப்போது தமிழில் கமலின் தக் லைஃப், அஜித்தின் விடாமுயற்சி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஷ்வம்பரா மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் ஐடென்டிட்டி ஆகிய படங்களில் நடிக்கிறார்.
இந்தப் படங்களை தொடர்ந்து சூர்யாவின் 45வது படத்திலும் இணைந்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் த்ரிஷா திரைத்துறையில் 22ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக சூர்யா 45 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோவை சூர்யா 45 படத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதையடுத்து மருதமலையில் உள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவரை பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களுக்கு கையசைத்து த்ரிஷா நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.