Skip to main content

நீயா நானா மோதலில் ஷங்கர் - லைகா! கண்டுகொள்ளாத கமல்!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

kjfjz

 

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. தற்போது அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் ஷங்கரும் அடுத்தாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தையும், ரன்வீர் சிங்குடன் ‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

 

இந்நிலையில், ‘இந்தியன் 2’ விவகாரம் தொடர்பாக லைகா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், “‘இந்தியன் 2’ படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 80 சதவிீத பணிகளை மட்டுமே ஷங்கர் நிறைவு செய்துள்ளார். எனவே, எஞ்சியுள்ள படத்தை நிறைவுசெய்து கொடுக்க ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும். ‘இந்தியன் 2’ படத்தை நிறைவு செய்யும் வரை பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இரு தரப்பு விளக்கங்களையும் கேட்டறிந்தது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு என்பது சுமுக தீர்வை ஏற்படுத்தாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இரு தரப்பினரும் கலந்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர். 

 

அதன்படி இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமையன்று ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக்கொடுத்துவிடுவதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை எனவும், ஜூன் மாதத்திலேயே படத்தை முடித்துக்கொடுக்க லைகா நிறுவனம் வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.

 

இதற்கிடையே கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு வரும் மே 2க்குப் பிறகு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்