அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விவேக், மோகன் ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிச் சென்றது. தற்போது சக்தி பிலிம் பேக்டரி இந்தப் படத்தினை வெளியிடுகிறது. இந்நிலையில் மே 19 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
போர்க் காட்சிகளுடன் தொடங்கும் ட்ரைலரின் முதல் வசனம், விஜய்சேதுபதியின் குரலில் ஆரம்பிக்கிறது. “எனக்கு இந்த உலகம் எதனால் படைக்கப்பட்டது என்ற கேள்வி நான் 3 வயசுல இருக்கும் போது ஆரம்பிச்சதுனு நினைக்கிறேன்” என விஜய் சேதுபதி ஒரு காட்சியில் கூற அடுத்த ஒரு காட்சியில் இலங்கைத் தமிழில் பேசுகிறார். உடைந்த புத்தர் சிலை, எலும்புக்கூடுகள், இலங்கைத் தமிழர்களின் போர்க் காட்சிகள் என ட்ரைலர் முழுவதும் அடர்த்தியான காட்சிகளாக இடம்பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக தள்ளிச்சென்று ரிலீஸ் ஆனாலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது யாதும் ஊரே யாவரும் கேளீர் ட்ரைலர்..