
ஒழிவுதிவசத்தே காளி, எஸ். துர்கா, சோழா என தனது படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சனல் குமார் சசிதரன். இவரது படங்கள் திரைப்பட விழாக்களில் திரையிட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. . குறிப்பாக எஸ்.துர்கா படம், ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்போது அவர் இயக்கியுள்ள படம் வழக்கு. இதில் டோவினோ தாமஸ் நடித்து தயாரித்தும் உள்ளார். இதில் சுதேவ் நாயர், கனி குஸ்ருதி, தேவகி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படம் கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படம் 2022ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இப்படம் வெளியாகமல் இருப்பதற்கு டோவினோ தாமஸ்தான் காரணம் என குற்றம் சாட்டினார் இயக்குநர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பக்க பதிவில், “2020இல் படமாக்கப்பட்ட இப்படம் 2021ல் போஸ்ட் புரொடக்ஷன் முடிந்தது. இருந்தாலும் டோவினோ தாமஸ் தனது ஸ்டார் அந்தஸ்து காரணமாக படத்தை வெளியிடத் தயங்குகிறார். படம் உருவான சமயத்தில் டோவினோ தாமஸ் வளர்ந்து வரும் நடிகர். அன்றே படம் வெளிவந்திருந்தால் என் மீதான பகை அவருக்கு எதிராக மாறியிருக்கும்” என குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து டோவினோ தாமஸ் இந்த குற்றச்சாட்டு குறித்து அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பேசியிருந்தார். அதில், “இயக்குநரின் திறைமைக்கு மதிப்பளித்து படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். இந்தப் படத்துக்காக ரூ.27 லட்சத்தை முதலீடு செய்தேன். படத்தின் வெளியீட்டில் தலையிட்டது சனல் தான் நான் இல்லை.

இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என சனல்குமார் கூறியபோது, அது வணிக ரீதியாக பலனளிக்காது என்று என்னுடைய கருத்தை அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் என்னுடைய அச்சத்தை தவறாகப் புரிந்துகொண்டு, என்னுடைய ஸ்டார் இமேஜ் பாதிக்கப்படும் என குற்றம் சுமத்துகிறார். படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடலாம் என்ற யோசனையை சனலிடம் கூறினேன். ஓடிடி தளங்கள் படைப்புரிமையை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன. ஆனால், சனல் அதற்கும் மறுத்துவிட்டார்” என்றார். மேலும் 2022ஆம் ஆண்டு மஞ்சு வாரியரை தொந்தரவு செய்ததாக சனல் குமார் மீது வழக்கு இருப்பதால் இந்த படத்தை எந்த ஓடிடியும் வாங்க முன்வரவில்லை என கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சனல்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மொத்த படத்தையும் ரிலீஸ் செய்துள்ளார். அதற்கான லிங்கை பகிர்ந்து, “படம் ஏன் வெளியே வரவில்லை என்பது புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.