தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு தனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்பும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதேபோல வருகிற சங்கராந்தி பண்டிகைக்கு இவர் நடிப்பில் ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் விஜயசாந்தி, ராஷ்மிகா மந்தானா, தமனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

mahesh babu

Advertisment

அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தின் புரொமோஷனுக்காக மகேஷ் பாபு தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஹைதரபாத்தின் சந்தன் நகரிலுள்ள அலுமினியம் தொழிற்சாலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியானது.

Advertisment

இதனால் எதிர்பார்த்ததைவிட ரசிகர்கள் கூட்டம் அங்கு கூடியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பல ரசிகர்கள் அந்த இடத்தில் கூடிவிட்டனர். ஆனால், ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களுக்கு வெறும் ஆயிரம் நுழைவு சீட்டு மட்டுமே கொடுத்திருக்கின்றனர். ஆனால், அங்கு 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடிவிட்டனர்.

மகேஷ் பாபு அந்த இடத்திற்கு வந்ததும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கூட்ட நெரிசல் ஏற்பட, அந்த இடத்தில் சிலருக்கு சின்ன காயங்களும், இரண்டு ரசிகர்களுக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

அடிபட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கான போதிய அனுமதியைக் காவல் துறையிடமிருந்து தயாரிப்புத் தரப்பு பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஏகே என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.