கரோனாவால் சினிமாத்துறை முடங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் என்று மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. கரோனா தொற்றின் சமூக பரவல் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பின்னரே இதுபோன்ற பொழுதுபோக்கு இடங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ரிலீஸுக்குத் தயாராக இருந்த படங்களில் பல, ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யத் தயாரிப்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இதற்கு இந்தியா முழுவதும் உள்ள கார்ப்ரேட் திரையரங்கு குழுமம், தனி திரையரங்கு உரிமையாளர்கள் வரை வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதுமையான முயற்சிகளுடன் பிரம்மாண்ட படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கும் திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் ஆடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அந்த ஆடியோவில், பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சத்யராஜ் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம் குறித்து பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரியுடன் இணைந்து திருப்பூர் சுப்ரமணியன் தயாரிக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தின் தயாரிப்பில் பிரபல தயாரிப்பாளர் பிரமீட் நடராஜனும் பங்கு பெறுவதாகக் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்திற்கு திரைத்துறையைச் சார்ந்த 200 பேர் முதலீடு செய்யவிருக்கிறார்களாம். விருப்பமுள்ளவர்கள் தானாக முன்வந்து முதலீடு செய்யலாம் என்றும், முழுக்கதையும் தயாராகி, படப்பிடிப்பிற்கு முந்தைய நாளின் போதே முதலீடு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு வியாபார அடிப்படையில் சதவிகிதத்தில் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படம் முதலில் நேரடியாகத் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும், அதன் பிறகு 100 நாட்கள் அல்லது 10 வாரங்கள் இடைவேளைக்குப் பிறகே ஒ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.