
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், சட்டவிரோத குடியேற்றச் சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டார். அதனடிப்படையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அங்கு டிரம்புக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன.
இந்த நிலையில் டிக்டாக் செயலில் உலகளவில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட காபி லேம், தனது விசா முறையை மீறியுள்ளதால் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் பிறந்த இவர், இதாலிக்கு குடிபுகுந்து அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இவர் ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார். அவரது விசா காலம் முடிந்தும் அவர் அமெரிக்காவில் இருந்துள்ளது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்பு அவரை கைது செய்த அதிகாரிகள், அவரே அமெரிக்காவை விட்டு வெளியேற சம்மதம் தெரிவித்ததால் நாடுகடத்தும் உத்தரவு இல்லாமல் காபி லேமை விடுவித்தனர். இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் அவர் அமெரிக்காவிற்குத் திரும்பும் போது அவருக்கு பாதுகாக்க உதவும் என கூறப்படுகிறது.
காபி லேம், கொரனா காலகட்டத்தில் சிக்கலான விஷயங்களுக்கு எளிதாக தீர்வு காணும் முறையை நகைச்சுவையாகவும் அமைதியாகவும் வீடியோக்கள் மூலம் தெரிவித்து பிரபலமடைந்தார். இப்போது 162 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை அவர் டிக் டாக்கில் வைத்துள்ளார்.