Skip to main content

பரபரப்பாகும் 'துணிவு' - புகைப்படத்தை வெளியிட்ட சமுத்திரக்கனி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

thunivu shooting spot image released by samuthirakani

 

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது. 

 

மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. ஏற்கனவே அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலைப் பாடியுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மஞ்சு வாரியரும் ஒரு பாடலை பாடியுள்ளார். 

 

இந்நிலையில் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "துணிவு... பரபரப்பாக" எனக் குறிப்பிட்டு இயக்குநர் எச்.வினோத்துடனும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுடனும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்க்கையில் சமுத்திரக்கனி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளது போலவும் பரபரப்பாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இப்படத்தின் டீசர், ட்ரைலர், பாடல் ஆகியவற்றை விரைவில் படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.