thug life issue case update

மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முன்னதாக நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்து கர்நாடகாவில் கொதி நிலையை ஏற்படுத்தியது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள், கன்னட மொழியை கமல் இழிவுபடுத்திவிட்டதாக போர்க்கொடிகள் தூக்கின.

Advertisment

மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை வலியுறுத்தி படத்திற்கு தடை விதித்தது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.

Advertisment

இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி நாகபிரசன்னா, கமல் தரப்பிடம் ஒரு மன்னிப்பு கேட்க ஈகோ இவ்வளவு தடுக்கிறதா? என சராமாரி கேள்விகளை எழுப்பினார். பின்பு படக்குழுவே படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க விரும்புவதாக தெரிவித்து கர்நாடக வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் கேட்டது. பின்பு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில் மகேஷ் ரெட்டி என்பவர் தக் லைஃப் படத்திற்கு கர்நாடகத்தில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது மனு தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் ‘தணிக்கை சான்றிதழ் பெற்ற தக்லைஃப் படத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும்? உரிய சான்றிதழ் பெற்ற பிறகு எந்த ஒரு படத்தையும் தடை செய்ய முடியாது. திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. படத்தை பார்த்து அதனை ஏற்க வேண்டுமா, இல்லையா என மக்களே முடிவு செய்வார்கள். படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்து கர்நாடக அரசு வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த கட்ட விசாரணையை இன்று ஒத்தி வைத்திருந்தனர்.

Advertisment

அதன் படி வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தக் லைஃப் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.