Aishwarya Rajesh

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திட்டம் இரண்டு'. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் நிறைவுபெற்றது. படத்தின் அனைத்து காட்சிகளும் சென்னையிலேயே படமாக்கப்பட்டன.

Advertisment

படத்தின் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்துள்ள படக்குழு, படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கிறது. தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சூழல்கள் நிலவினாலும், மக்களின் வருகை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து திரைத்துறையினர் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவிவருகிறது. இதைக் கவனத்தில் எடுத்த 'திட்டம் இரண்டு' படக்குழு, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்து முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், சோனி லைவ் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டு மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், இம்மாதத்தின் இறுதியில் திட்டம் இரண்டு படத்தை வெளியிட சோனி லைவ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

சமீபத்தில் சோனி லைவ் தளத்தில் வெளியான வாழ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நரகாசூரன், கடைசி விவசாயி ஆகிய படங்களை அடுத்தடுத்து வெளியிடும் திட்டத்தில் சோனி லைவ் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விரு படங்களைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் 'திட்டம் இரண்டு' திரைப்படம் வெளியாகவுள்ளது.