thirumavalavan about the kashmir files national award

இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் கலைஞர்கள் மற்றும் தமிழ் படங்கள் என்று பார்க்கையில், சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் கடைசி விவசாயி வென்றுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற 'மாயவா சாயவா...' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதைத் தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் சிறந்த கல்வித் திரைப்படம் என்ற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த படம் என்ற பிரிவில் மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படத்திற்கும் ஸ்பெஷல் ஜுரி விருது, இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஷெர்ஷா' படத்திற்கும் கிடைத்துள்ளது.

Advertisment

இதில், தமிழில் முக்கிய படங்களாகப் பார்க்கப்பட்ட சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியின் ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியின் சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியின் கர்ணன் உள்ளிட்ட படங்கள் ஒரு விருதினைக் கூட பெறவில்லை. குறிப்பாக ஜெய் பீம் படத்திற்கு விருது அறிவிக்காதது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்கு நானி, சுசீந்திரன், பி.சி ஸ்ரீராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், செய்தியாளர்களைச் சந்தித்த வேளையில் அவரிடம் இது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விருது கிடைத்திருப்பது குறித்த கேள்விக்கு, "அது ஒரு முரண்பாடான படம். இன்றைக்கு எந்த அளவுக்கு இந்த ஆட்சியாளர்கள், எந்த சிந்தனை ஓட்டத்தில் இருக்கிறார்கள், கலைத்துறையை எவ்வாறு அவர்கள் கையாளபார்க்கிறார்கள் என்பது இந்த படத்திற்கு அவர்கள் விருது கொடுக்கப்பட்டதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்" எனப் பதிலளித்தார்.

இப்படத்திற்கு விருது வழங்கியதற்குயாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, "கலைத்துறையை சார்ந்தவர்கள் இதற்கு கருத்து சொல்ல முடியாது. வெளியில் இருக்கிற எங்களை போன்றவர்கள் மற்றும் படம் பார்க்கக் கூடியவர்கள் தான் கருத்து சொல்ல முடியும். என் படத்திற்கு ஏன் கொடுக்கவில்லை என்று ஒரு இயக்குநர் கேள்வி கேட்க முடியாது. அது நாகரிகம் இல்லை" என்றார். இப்படத்திற்கு விருது கிடைத்திருப்பது சர்ச்சையான நிலையில் முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் உள்ளிட்டோர்கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.