Skip to main content

“மற்ற மொழி படங்களை ரிலீஸ் செய்துக்கொள்கிறோம்” -திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு! 

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

tripur

 

 

கோலிவுட்டில் சினிமா தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வியாபார ரீதியாக நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கமும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தாக வேண்டும் என்று மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து நேற்று மீண்டும் சுற்றறிக்கை ஒன்றை பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.

 

அதில், “தமிழ்த்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்‌கியவுடன்‌, இனிமேலும்‌ வி.பி.எஃப் என்ற கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள்‌ சங்கத்தை சேர்ந்த அனைவருக்கும்‌, அனைத்து டிஜிட்டல்‌ புரொஜக்‌ஷன் (QUBE/UFO/PRASAD) நிறுவனங்களுக்கும்‌ முறையாகக் கடிதம்‌ அனுப்பினோம்.

 

அதில்‌ 12 வருடங்களுக்கு மேலாகக் கட்டி வரும்‌ VPF என்கிற வாராவாரம்‌ கட்டணத்தை இனிமேல்‌ கொடுக்க முடியாது. டிஜிட்டல்‌ நிறுவனங்கள்‌ மாஸ்டரிங்‌, குளோனிங்‌, டெலிவரி மற்றும்‌ சேவைக்கான ஒரு முறை (ONE TIME PAYMENT) கட்டணம்‌ எதுவோ அதை மட்டுமே இனிமேல்‌ எங்களால்‌ தர முடியும்‌ என்று தெரிவித்து இருந்தோம்‌.

 

திரையரங்கில்‌ உள்ள புரொஜக்டர்‌ சம்பந்தப்பட்ட லீஸ்‌ தொகையை திரையரங்குகள்‌தான்‌ கட்ட வேண்டும்‌, தயாரிப்பாளர்கள்‌ அல்ல என்பதையும்‌ தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்‌.

 

அத்தகைய ஒரு முறை கட்டண முறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால்‌, திரையரங்குகள்‌ மீண்டும்‌ திறக்கப்பட அனுமதி வந்தாலும்‌, எங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்‌ என்பதையும்‌ குறிப்பிட்டிருந்தோம்‌.

 

100 பேருக்கும்‌ மேல்‌ நடப்பு தயாரிப்பாளர்கள்‌ இந்த முடிவை எடுத்துத் தெரிவித்த போதிலும்‌, திரையரங்கு உரிமையாளர்களும்‌, டிஜிட்டல்‌ புரொஜக்‌ஷன்‌ நிறுவனங்களும்‌ (QUBE/UFO), எங்களின்‌ கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல்‌, நாங்கள்‌ தொடர்ந்து வி.பி.எஃப் கட்டணத்தை வாங்குவோம்‌ என்று தெரிவித்துள்ளனர்‌.

 

தயாரிப்பாளர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக்கைகளில்‌ ஒன்றைக் கூட அவர்கள்‌ ஏற்றுக்‌கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளதால்‌, நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌ ஒருங்கிணைந்து, வி.பி.எஃப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும்‌ வரை தங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

எனவே, இந்த வி.பி.எஃப் கட்டணப்‌ பிரச்சனைக்கு முடிவு எட்டும்‌ வரை, அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌, தங்களின்‌ புதிய படங்களின்‌ வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்தோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “இந்நேரத்தில் பேசப்பட வேண்டிய பிரச்சனை இல்லை இது. எங்கள் தரப்பிலும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தாலும் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளை மட்டும் நிரப்பி திரையரங்குகளை திறக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து புதிய கோரிக்கைகளை முன்வைக்கும்போது அதனை எங்களால் ஏற்க முடியாது. தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்தால் மேலும் 2 மாதங்களுக்கு திரையரங்குகளை மூடிவைப்பது எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார். 

 

தற்போது வீடியோ கான்ஃப்ரென்ஸ் மூலம் நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில், பாரதிராஜாவின் கோரிக்கையை ஏற்க முடியாது. அப்படி கட்டணத்தை கட்ட மாட்டோம் என்று சொன்னால், மற்ற மொழி படங்களை ரிலீஸ் செய்துக்கொள்கிறோம் என்று முடிவு செய்துள்ளனர். மேலும், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில திரையரங்கு அதிபர்களுடன் இணைந்து தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என்ற ஒன்றை நிறுவ இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காவலாளி... ஏ.வி.எம் வாசலில் நின்று சபதம் எடுத்த பாரதிராஜா!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

தமிழ்த்திரையுலகில் முன்னணி இயக்குநராகக் கொடிகட்டிப் பறந்தவர் பாரதிராஜா. புதுமை இயக்குநரான பாரதிராஜா எப்படி ஆழமான முத்திரைகளைப் பதித்தார் என்பது வரலாறு. ஆரம்பக்காலத்தில் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அதில் கிடைத்த நீண்ட அனுபவம் மூலமாக 16 வயதினிலே படத்தை இயக்கினார். உதவி இயக்குநராகச் சேர்வதற்கு முந்தைய காலகட்டம் பாரதிராஜாவிற்கு எப்படி இருந்தது?

 

அந்தக் காலகட்டங்களில் வடபழனியில் நிறைய ஸ்டூடியோக்கள் இருக்கும். இன்றைக்கு அவை மருத்துவமனைகளாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. 30 வருடத்திற்கு முன்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவைப் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் எல்லோராலும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்துவிடுவார்கள். ஏ.வி.எம் ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்து செல்வதையே பலர் பிறவிப்பயனாக நினைப்பார்கள். ஏ.வி.எம் மட்டுமல்ல வாகினி, சத்யா, ஜெமினி ஆகிய ஸ்டூடியோவிற்குள் நுழைவதென்பதும் பெரிய விஷயம். முதன்முறையாக பி.ஆர்.ஓவாக அந்த ஸ்டூடியோவிற்குள் நுழைந்தபோது எனக்கும் அதே உணர்வுதான் இருந்தது. 

 

நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன்தான் பாரதிராஜா ஊரிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு வந்து நடிக்க வாய்ப்பு கேட்டு ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குச் சென்றுள்ளார். வழக்கம்போல வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்து நிறுத்திவிடுகின்றனர். கடைசியில் அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகின்றனர். அதில், அதிருப்தியான பாரதிராஜா, 'பெரிய நடிகராகி இதே ஸ்டூடியோவிற்குள் ஒருநாள் நான் நுழைவேன்' என வெளியே நின்று சபதம் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்தாராம். அப்படியே காலங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் இயக்குநராக முடிவெடுத்த பாரதிராஜா, ஜெகநாதன், ஏ.எஸ்.பிரகாசம், ரா.சங்கரன் உட்பட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் பேசப்பட்டது. யார் இந்த பாரதிராஜா... இப்படிப்பட்ட ஒரு திறமைசாலி எங்கிருந்து வந்தார் என அனைவரும் பேசவும் தேடவும் ஆரம்பித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து வெளியாகிய கிழக்கே போகும் ரயில், தேவி காம்ப்ளக்சில் 50 வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் வெளியான புதிய வார்ப்புகள் 175 நாட்கள், சிகப்பு ரோஜாக்கள் 100 நாட்கள், நிறம் மாறாத பூக்கள் 125 நாட்கள் என தொடர்ந்து 5 வெற்றிப்படங்கள் கொடுத்தார். இந்த ஐந்து படங்கள் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குநர் என்றால் அது பாரதிராஜாதான் என்றானது. பாரதிராஜா படம் வெளியாகிறது என்றால் தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரே நேரத்தில் ஆயிரம்பேர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். எந்த ஏ.வி.எம் ஸ்டூடியோ வாசலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டாரோ பின்னாட்களில் அதே நிறுவனம் பாரதிராஜா இயக்கிய படத்தைத் தயாரித்தது. எந்த ஸ்டூடியோவில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே நிறுவனத்திற்கு படம் இயக்குவதென்பது எவ்வளவு பெரிய வெற்றி என யோசித்துப்பாருங்கள். இயக்குநராகத் தன்னை நிரூபித்த பின், ராஜமரியாதையுடன் அந்த ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்தார் பாரதிராஜா.

 

 

Next Story

கண்கலங்கிய பாரதிராஜா... படுத்த படுக்கையில் நடிகர் பாபு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021
barathiraja

 


தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அவருடைய ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாபு.

 

அண்மையில் அவரது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் படத்திலேயே தனது நடிப்பால் கவனம் பெற்ற பாபுவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. 14 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பாபு. ஆனால், மனசார வாழ்த்துங்களேன் படத்தில் நடித்தபோது பெரும் சோதனை ஏற்பட்டது.

 

ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார் நடிகர் பாபு. இருந்தபோதிலும் அவரால் பழையமாதிரி எழுந்து நடமாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதன்பிறகு 20 வருடமாக படுத்த படுக்கையாகவே சிகிச்சை பெற்று வருகிறார்.

 

நடிகர் பாபுவை அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா அண்மையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்றிருந்தார். அப்போது அவர் கண்கலங்கி நடிகர் பாபுவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தார். கஷ்டத்தில் இருக்கும் பாபுவின் மருத்துவ உதவிக்காக நிதியுதவி அளித்துவிட்டு வந்துள்ளார்.பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.