எப்பொழுதெல்லாம் மனித வாழ்வில் அறம் குன்றி மக்கள் அல்லல்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் மாற்றம் ஏற்படுத்த ஓர் சீர்திருத்தவாதி உருவாகிறான் என்று தத்துவ மரபு வாழ்வில் சொல்லப்படுவதுண்டு. அப்படித்தான் இங்கே புத்தர், இயேசு, நபிகள் நாயகம், ஆகியோர் பிறந்து பெரும் மாற்றங்களை, சீர்திருத்தங்களை உண்டாக்கி அவர்களை  உலகமெங்கும் பெருவாரியான மக்களால் பின்பற்றப்படுவதற்கு காரணமாக அமைகிறார்கள்.

Advertisment

ஒரு பெண் சீர்திருத்தவாதி உருவாகிறாள் என்று ஏன் யாருமே சொல்லவில்லை. எந்த இலக்கியமும், தத்துவங்களும் ஏன் ஒரு பெண்ணை சீர்திருத்தவாதியாக முன்னிலைப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது? உண்மையில் உருவாகவே இல்லையா அல்லது ஆணாதிக்க சமூக மனநிலை உருவானதை உலகுக்கு சொல்லவில்லையா என்ற கேள்வி பதிலற்று நிற்கிறது.

Advertisment

இது ஒரு புறமிருக்க, மனிதர்களுக்கிடையே ஏற்படுகிற மன இறுக்கத்தின் வழியாக கோவம், பலிவாங்குதல், கொலை செய்தல் என்ற எண்ணங்கள் உருவாகிறது. தன்னை எதிர்ப்பவர்களை அழித்து ஒழிக்கும் செயலிற்கு தருகிற முக்கியத்துவத்தை மன்னிப்பு என்ற ஒன்றிற்கு ஏன் தரவில்லை. மன்னிப்பு என்ற கருணை மனநிலை ஏன் வரவில்லை என்ற கேள்வியும் உருவாகிறது.

மேலே கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் பதிலாகத் தான் ஒருவர் நிஜத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரைப் பற்றி இந்தி மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படம் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.

Advertisment

உலகளவில் சாதி, மதம், இனம், மொழி என ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் அந்தந்த நிலப்பரப்பில் அதை சரி செய்ய அங்கே சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை வருணாசிரம தத்துவத்தின்படியிலான படிநிலைகளில் ஏற்றத்தாழ்வுகளும், அதனைக் கொண்டு கொடுமைகளும் இன்று வரை நடந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்தியாவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் ஆதிக்கச் சாதியினரால் நிலம் பறிக்கப்பட்டு, உழைப்பு சுரண்டப்பட்டு, பெண்கள் பாலியல் ரீதியிலான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டும் வாழ்கிறார்கள். அங்கே உள்ள கிறித்துவ மடத்திற்கு பொறுப்பு எடுத்துக்கொண்டு வருகிறார் கிறிஸ்தவ துறவியான சகோதரி ராணி மரியா. அன்றாடம் இறைமகன் இயேசுவை மண்டியிட்டு ஜெபித்தோம், தேவாலயத்திற்கு வருகிறவர்களுக்கு இயேசுவின் போதனைகளை உதிர்த்தோம் என்றில்லாமல் மக்கள் மத்தியில் வேலை செய்ய கிளம்புகிறார்.

அந்த கிராமத்தின் அடிப்படைவாதங்களை, மூடநம்பிக்கைகளை, ஏற்றத்தாழ்வுகளை ஒவ்வொன்றாக அன்போடும், கருணையோடு எதிர்கொண்டு போராடுகிறார். எடுத்த உடனேயே வெற்றி கண்டு விடவில்லை. மக்கள் மத்தியில் முதலில் ஆதரவு கிடைக்கவில்லை, பிறகு ஆதரவு கிடைத்து அடுத்த கட்டத்திற்கு நகரும் போது எளிய மக்களை சுரண்டி வாழ்ந்த முதலாளிகளுக்கு பிடிக்கவில்லை, அவர்கள் எதிர்க்கிறார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. இறுதியாக, கூட்டு பொருளாதாரத்தினை கையில் எடுத்து அதனைக் கொண்டு அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்குகிறார். தங்களை எதிர்பார்த்து தங்களிடம் கைகட்டிக் கொண்டு கடன் பெற நின்ற மக்கள், சுயமாக முன்னேறி வருவதை விரும்பாத முதலாளி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி, தீ வைத்து கொளுத்தி அழித்து விடுகிறார்.

இப்போது காவல்துறை உதவியுடன் அந்த முதலாளியை சிறைக்கு அனுப்புகிறார் சகோதரி ராணி மரியா. இதனால் அந்த முதலாளி கோபமடைகிறான். இந்த நேரத்தில் தான் ராணி மரியாவின் சகோதரி நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருக்கிறாள் அவளுக்கு உதவியாக இருக்க கிராமத்திலிருந்து நகரத்திற்கு பேருந்தில் கிளம்பும் போது கத்தியால் குத்தி கொல்லப்படுகிறாள். இது அந்த முதலாளியின் தூண்டுதலால் தான் ஒருவன் செய்திருப்பான்.

அந்த கொலையாளியினை சிறையிலிருந்து திரும்பியதும், அவனை சகோதரி ராணி மரியாவின் குடும்பத்தினர் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து “என் மகள் இரத்தம் படிந்த உந்தன் கரங்களை ஒருமுறை தொட்டு பார்க்கவா” என்று கேட்ட நொடியில் கொலையாளி கதறி அழுவான். இந்த மன்னிப்பு அனைவரையும் கலங்க வைக்கிறது. அந்த கொலையாளியின் குழந்தைகளையும் சகோதரி ராணி மரியாவின் குடும்பத்தினர் தத்தெடுத்து படிக்க வைத்து வளர்ப்பார்கள்.

ஆதிக்கத்தை எதிர்த்து மரணமடைந்த ராணி மரியாவின் நிஜ வாழ்வினை அப்படியே எடுத்த இப்படம் தான் ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ்.  மலையாள நடிகை வின்சி அலோசியஸ் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார்.  ஒரு பெண் சீர்த்திருத்தவாதி இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரின் குடும்பம் மன்னிப்பு என்ற பெரும் கருணையினை கையில் எடுத்திருக்கிறார்கள் என்ற பெரும் உண்மையினை இப்படத்தின் வழியே நமக்கு கடத்துகிறார்கள்.