
ஆனா பென், ஸ்ரீநாத் பாஸி மற்றும் ரோஷன் மேதிவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'கப்பேலா'. தற்போது இந்தப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி தமிழ், தெலுங்கு மொழி பெசும் மலையாள பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இப்படத்தைச் சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை வைத்து 'பெல்லி சூப்புலு' என்னும் தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் 'கப்பேலா' படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
'கப்பேலா' படத்தைப் பாராட்டியுள்ள தருண் பாஸ்கர், “இப்படத்தில் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே, பின்னணி இசையுடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஹீரோ இல்லை, விவசாயிகள் பற்றியோ, ராணுவ வீரர்கள் அல்லது இந்தியா பற்றியோ கடைசி பத்து நிமிடத்தில் நீண்ட உரை இல்லை. ஆனாலும், இவையும் திரைப்படங்கள் என்றே அழைக்கப்படுகின்றன” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு பட ரசிகர்கள் தனது ஹீரோவின் படத்தை அவர் தவறாக பேசிவிட்டார் என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களும் தருணை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனைப் பொருத்துக்கொள்ள முடியாத தருண் ஹைதராபாத் சைபர் போலீஸிடம் புகாரளித்துள்ளார்.
அதில், “கடந்த சில நாட்களாக திரைப்படங்கள் குறித்து நான் வெளியிட்ட ஒரு பதிவு என்னையும் என் குழுவினரையும் கேலி செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, நாங்கள் ஹைதரபாத் சைபர் க்ரைம் உதவி ஆணையர் ஹரிநாத்தை அணுகினோம். மேலும் அனுதீப் மற்றும் கிருஷ்ண தேஜ் என்ற இரண்டு ட்விட்டர் ஐ.டி.-களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.
அவர்களிடம் இந்த விவகாரம் பற்றியும், கேலி கிண்டல்கள் எப்படி ஒரு தனி நபரைப் பாதிக்கின்றன என்பது குறித்தும் அமைதியாகப் பேசினோம். தனிப்பட்ட தாக்குதல்கள், தகாத வார்த்தைகள் இனியும் தொடர்ந்தால் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு போலீஸில் புகாரளிப்போம் என்று எச்சரித்தோம். முதலில் நேர்மறையாகப் பேசிய அவர்கள் போகப் போக இதை ஒரு மிரட்டல் போன்ற உரையாடலாக மாற்ற முயன்றதால் அந்தத் தொலைபேசி உரையாடலைக் காவல்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இத்துடன் புகார் நகலையும் இணைத்துள்ளோம்.

இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மிரட்டலுக்கும், அழைப்புகளுக்கும், தகாத வார்த்தைகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.