
அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஈ5 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தங்கர் பச்சன் வழங்குகிறர். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் இன்று(05.06.2025) திரையரங்குகளில் வெளியகியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தை ஆதரிக்க வேண்டும் என மக்களை தங்கர் பச்சன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான திரைப்படம் உருவாகி இருக்கிறது. உழவுக் குடும்பத்தில் பிறந்து திரைத்துறையில் அறிமுகமாகி நாற்பது ஆண்டுகளாக இத்துறையில் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழ் சமூகம் குறித்து இலக்கியம் ,திரைப்படம் மற்றும் சமூகப் பணி மூலம் நான் ஆற்றி வரும் செயல் பாடுகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படத்தில் எனது மகன் 'விஜித் பச்சான்' கதை நாயகனாக அறிமுகமாகிறார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்! பாலுமகேந்திரா சீடர் சிவ பிரகாஷ் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை இதுவரை கண்ட தமிழக ஆளுமைகளின் கருத்துக்களால் இப்படம் குறித்த எதிர் பார்ப்பு உருவாகியிருக்கிறது. சென்ற தீபாவளியிலிருந்து எட்டு மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு வாரமும் காத்திருந்து வெளியிட முயற்சி செய்து இயலாத நிலையில் தான் இத்திரைப்படம் இன்று (ஜூன் 5 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.
மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படம் போன்ற நல்ல தரமான படைப்புகளை என் மக்கள் கைவிட மாட்டார்கள் எனும் நம்பிக்கையில் தான் வெளியிடுகின்றோம். நீங்கள் இப்படத்தை உங்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று காண்பதுடன் , உங்களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இச்செய்தியை பகிர வேண்டுகிறேன். என்னையும் என் படைப்புகளையும் ஆதரிப்பது போல் என் மகன் விஜித் பச்சான் அவர்களையும் ஆதரிக்கும் படி வேண்டுகிறேன்.” என்றுள்ளார்.