Skip to main content

"கோவைனா துள்ளுறீங்க... கடலூர்னா கண்டுக்கமாட்டீங்களா" - கொந்தளித்த தங்கர் பச்சான்

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Thankar Bachan about nlc cuddalore issue

 

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம், மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடி நடந்துள்ளதாகவும், அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் டிஐஜி ஜியாவுல் ஷேக் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான், "நமக்கெல்லாம் காலம் காலமாக உணவு தந்து கொண்டிருக்கும் விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி தவிர தமிழகத்தின் எந்த ஒரு கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் களத்தில் இறங்கவில்லை. 24,000 ஏக்கர் மூன்று பருவங்களும் விளையக்கூடிய விளைநிலங்கள் அழித்தொழித்து மக்கள் வெளியேற்றப்படுவதை ஏன் எவருமே கண்டு கொள்ளவில்லை? சிறு சிறு சிக்கல்களை எல்லாம் ஊதிப்பெருக்கி அரசியல் தொழில் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் வீடியோ மூலம் பேசிய அவர், "என்.எல்.சி. நிர்வாகம், மறுபடியும் விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடிய வேலையை இன்றைக்கு தொடங்கியிருக்காங்க. அந்த நிலங்கள், உலகம் தோன்றிய காலங்களில் தொடங்கி மக்களுக்கு உணவு கொடுத்துக்கிட்டு இருக்கு. ஏற்கனவே பிடுங்கப்பட்ட நிலங்கள் போதாது என்று மறுபடியும் இந்த வேலையை ஆரம்பிச்சுருக்காங்க. இதை யாருமே கண்டுக்கவில்லை. நாமெல்லாம் எதை எதையோ பேசிக்கிட்டு இருக்கோம், எதை எதையோ பண்ணிக்கிட்டு இருக்கோம். 

 

தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள் 100க்கும் மேற்பட்டவை இருக்கும். ஆனால் ஒரு சங்கம் கூட அங்கு களத்தில் நிற்கவில்லை. அவர்கள் எல்லாம் தொலைக்காட்சியில் விவாத மேடைகளிலும், டெல்லியில் போராட்டம் நடத்தியும் விளம்பரம் தேடிக் கொள்ளத்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் என்ன வேலை. விவசாய சங்கங்கள் எதுக்கு இருக்கு. விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை வரும் போது விவசாயிகள் வர வேண்டும். அது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல. கோயம்புத்தூரில் உள்ள விவசாயிகளுக்குப் பிரச்சனை என்றால் உடனே எல்லாரும் துள்ளுறீங்க. தஞ்சாவூர்ல நடந்தா டெல்டா மாவட்டமே போச்சு என்கிறீர்கள். அப்போ கடலூரில் நடந்தா அது பிரச்சனையே இல்லையா. 

 

ஒரே ஒரு கட்சி மட்டும் அங்கு போராடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சி மட்டுமா தேர்தல் களத்தில் நிற்கபோகுது. வெட்கமே இல்லாமல் அரசியல் கட்சிகள் என்ன பண்ண போகிறீர்கள். நாக்கை தொங்க போட்டு ஓட்டு கேட்க மட்டும் அங்கு வருவீர்கள். பாதிக்க படுகிற மக்கள் அதற்கான பாடத்தை கொடுப்பாங்க" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.