நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இக்குழுவில், கடந்த 10ஆம் தேதி மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம். வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கலாம் என ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் நீட் தேர்வுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
"நீட் தேர்வுஎனும் அநீதி!–தங்கர் பச்சான்
மாணவர்களே உங்களின் எதிர்ப்பை50பைசா செலவில் உடனே எழுதி அனுப்புங்கள்.
கல்வியை மட்டுமே கற்றுக்கொண்டு வாழ்வின் அனைத்து வசதிகளையும், உயர் பதவிகளையும், பொறுப்புகளையும் சிலர் மட்டுமே காலம் காலமாக அனுபவித்தார்கள். இப்பொழுதுதான் நாட்டின் முக்கால் பகுதி மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் வசதிகளும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தக் கல்விகூட முழுமையான, தரமான கல்வி அல்ல. ஏழைகளுக்குத் தரப்படும் தரமற்ற கல்வியாகவே உள்ளது. இந்நிலையில், உயர் கல்விக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நீட் (NEET)எனும் தகுதித்தேர்வை உருவாக்குகிறோம் என இந்திய ஒன்றிய அரசு உருவாக்கியது. பணவசதி படைத்தவர்கள் மட்டும் பணம் கொடுத்து உயர்கல்வியை விலைபேசி உயர்பதவிகளை அடைந்துவிடுகின்றார்கள் எனும் காரணம் கூறித்தான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் இதன்மூலம் உயர்கல்வியை இழந்துவருபவர்கள் முதல்தலைமுறைக்கல்வியைஇன்னும் கடக்காத வறுமை கோட்டிற்குக் கீழே வாழும் கிராமம் மற்றும் ஏழை மாணவர்கள்தான்.
கல்வி என்பது நம்நாட்டில் ஒரு பெரும் வணகமாகிப் போன நிலையில் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே பாதுகாப்பு தமிழ்நாடு அரசு மட்டும்தான். இவ்வாண்டு முதல் மருத்துவக் கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசு பதிலளிக்காத நிலையில் தமிழக அரசு நீதியரசர்A.K.Rajanஅவர்களின் தலைமையில் எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது. பொது மக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என தமிழகத்திலுள்ள குடிமக்கள் யாராக இருந்தாலும் எதற்காக நீட் தேர்வை எதிர்க்கிறோம் எனும் காரணங்களை உடனடியாக எழுதி பின்வரும் முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல்(EMAIL)அனுப்ப வேண்டுகிறேன். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் பானுமதி அவர்கள்15பைசா அஞ்சல் அட்டையில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றுக்கு மதிப்பளித்து அதன் அடிப்படையில் வழக்கு ஒன்றில் நீதி வழங்கினார் எனும் செய்தியை இந்நேரம் நம் மாணவர்கள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
“இது மக்களால் உருவாக்கப்பட்ட மக்களாட்சி. இங்கே அனைத்துக் குடி மக்களுக்கும் ஒரே மாதிரியான சமமான நீதி கிடைக்க வேண்டும். இத்தனைக் காலங்கள் எங்களுக்கு கல்வியைத் தராமல் அதுவும் பணக்காரர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என தரம் பிரித்து வழங்குகிறீர்கள். அனைவருக்கும் சமமான தரமான ஒரே கல்வியை வழங்காமல் எவ்வாறு எங்களுக்குத் தகுதித் தேர்வை நடத்துவீர்கள். முதலில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வியை எங்களுக்கு வழங்குங்கள். அதன்பின்தகுதிதேர்வை(NEET)நடத்துங்கள். அதுவரை நீட் தேர்வு நடத்துவது எங்களுக்கு இழைக்கும் அநீதி” என அனைத்து மாணவர்களும் உடனே50பைசா அஞ்சல் அட்டை வாங்கி எழுதி அனுப்புங்கள். எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். நமக்கான நீதி கிடைக்க உடனே செயல்படுங்கள்.
கடிதம் அனுப்ப கடைசித்தேதி:23.06.2021
கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
நீதியரசர் மாண்புமிகுA.K.ராஜன் குழு
மருத்துவக்கல்வி இயக்குநரகம்,
(மூன்றாம் தளம்)
கீழ்ப்பாக்கம்,
சென்னை-600010
மின்னஞ்சல் (EMAIL ID):neetimpact2021@gmail.com" என கூறியுள்ளார்.