Advertisment

"இனி நீங்கள் பேசவேண்டாம்; உங்கள் படம் பேசும்..." மோகன் ஜியை பாராட்டிய தங்கர் பச்சான்!

Thangar Bachan

Advertisment

மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ருத்ர தாண்டவம்'. ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜீபின் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உட்படப் பலருக்கும் சிறப்புக் காட்சி திரையிட்டு, படம் தொடர்பான அவர்களின் கருத்துகளைப் படக்குழு கேட்டறிந்துவருகிறது.

அந்த வகையில், ருத்ரதாண்டவம் திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் தங்கர் பச்சான் படக்குழுவினரைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை. தங்களின் 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தைக் கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதைத் தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையைச் செய்ததுபோல இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை என உணர்கிறேன்.

உங்களின் முந்தைய திரைப்படம் 'திரௌபதி' பெரும் வணிக வெற்றியை அடைத்திருந்தாலும் எனக்கு அது பிடித்தமானதாக இல்லை. அத்துடன் ருத்ர தாண்டவம் பார்த்துப் பாராட்டுபவர்களின் பட்டியலையும் அவர்களின் பாராட்டுகளையும் காண நேர்ந்த பொழுது நான் இந்தப் படத்தை பார்த்துத்தான் ஆக வேண்டுமா எனவும் நினைத்தேன். படம் பார்த்து முடிந்ததும் அவ்வாறு எண்ணியதற்காக இப்பொழுது மனம் வருந்துகிறேன்.

Advertisment

மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற, காண நேர்கின்ற இன்றைய சிக்கல்களைத்தான் காட்சிகளாகக் கருத்துகளாக முன் வைக்கிறீர்கள் என்பதால் இப்படத்தைப் பார்த்தவர்களால் மற்றவர்களுடன் இதைப்பற்றிப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. எப்படியாவது இத்திரைப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகமாகவே நீங்கள் பேசுவதைக் காண்கிறேன். இனி அது தேவையில்லை. இனி உங்களின் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும்.

மக்களின் பலவீனத்தைப் பணமாக்குவதற்காக பொழுதுபோக்கு எனும் போதைப்பொருளைத் திரைப்படங்களாக உருவாக்கி சமூகத்தைப் பின்னோக்கி சீரழிப்பவர்களுக்கிடையில் விழிப்புணர்வைத் தூண்டும் உங்களின் ருத்ர தாண்டவத்தை மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ஒரு திரைப்படத்தின் வெற்றி, முதலீடு செய்த தொகையைப் பல மடங்காகத் திருப்பி எடுப்பது மட்டுமல்ல. சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை விதைப்பதும் ஆகும். இத்திரைப்படம் குறித்த குறைகள் எனக்குத் தேவையில்லை. இவ்வணிகச்சூழலில் கிடைத்த நடிகர்களைக்கொண்டு கிடைத்த வசதி வாய்ப்புகளைக்கொண்டு எவரும் பேசத்துணியாதவைகளை திரை ஊடகத்தின் மூலமாகப் பல கோடி மக்களின் இதயங்களுக்குக் கடத்தியிருக்கும் உங்களுக்கும் திரைப்படக்குழுவினருக்கும் இம்மக்களில் ஒருவனாக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

thangar bachan mohan g
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe