Skip to main content

”விஜய் ரசிகர்களுக்கு இப்படி நடக்கும்னு நினைக்கல..!” - அர்ச்சனா கல்பாத்தி

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்பு மிகுந்த படங்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கும் படம் விஜய் நடிக்கும் 'பிகில்'. தீபாவளி வெளியீடாக வரும் 'பிகிலு'க்காக விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் இந்த ஆண்டில் வெளியான அஜித் படங்களான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டுமே வெற்றி பெற்று, அதில் விஸ்வாசம் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருக்க, தங்கள் தளபதி படத்தின் மூலம் அதை முந்த வேண்டுமென காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். 'பிகில்' ஆடியோ ரிலீஸ் விழாவில் விஜய் பேசியது வழக்கம் போல வைரலாக, விழாவுக்கு வந்த ரசிகர்கள் சிலர் காவல்துறையால் தாக்கப்பட்டது சர்ச்சை ஆனது. இப்படி 'பிகிலை' சுற்றி அனலாக இருக்க படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் முக்கிய பங்காகவும் 'பிகில்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசராகவும் செயல்படும் அர்ச்சனா கல்பாத்தியை சந்தித்தோம். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.

 

archana kalpathi



விஜய்யுடன் பழகியிருக்கிறீர்கள்... அவரது இயல்பு எப்படி?

ஆரம்பத்துல எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நம்ம கரெக்ட்டா ஒர்க் பண்ணனும், ஒரு நல்ல பெயர் எடுக்கணும் என்ற பயம். ஆனா, சார் எங்களை ரொம்ப கம்ஃபர்டபிளா வெச்சிக்கிட்டார். செட்ல என்ன நடக்குதுன்னு எல்லாமே விஜய் சாருக்குத் தெரியும். அந்த அளவுக்கு அக்கறையாகவும் கவனமாகவும் இருப்பார். செட்டில் மட்டுமல்ல, இண்டஸ்ட்ரியில் என்ன நடக்கிறது என்பதையும் முழுக்க தெரிஞ்சு வச்சுருப்பார். ரொம்ப அறிவாளி அவர். மத்தவங்கள எப்படி மதிக்கணும்னு அவர்கிட்ட கத்துக்கிட்டேன். எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் மத்தவங்களுக்கு மரியாதை தருகிற விதம் ஒன்னு இருக்கு. 'நீ, வா, போ'ன்னுதான் நாம பேசுவோம். ஆனா அவர் எல்லார்கிட்டயும் 'வாங்க போங்க'ன்னு தான் பேசுவார்.

நீங்கள் விஜய் ரசிகர் என்பதால் இந்தப் படத்திற்கு அட்லி கேட்டதை விட நீங்கள் அதிகமாக செய்ததுண்டா?

இல்லை. அவர் கேக்குறதை நாங்க கொடுப்போம். ஏன்னா படத்தின் தரத்தில் அட்லி காம்ப்ரமைஸ் ஆக மாட்டார். படத்துக்கு என்ன வேணுமோ அதை கண்டிப்பா நாங்க பண்ணிடுவோம். இதுதான் எங்க குறிக்கோள்.

'பிகில்' ஆடியோ விழா குறித்தும் போஸ்டர் குறித்தும் விஜய் பேச்சு குறித்துமென அவ்வப்போது சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அப்படி எதிர்கொள்கிறீர்கள்?

என்ன நடந்தாலும் நாம போற வழில போகணும். மத்தவங்கள பாதிக்காம இருக்கோமா என்பதுதான் கேள்வி. இந்த மாதிரி விஷயங்கள் என்னை டிஸ்டர்ப் பண்ணாது. சொல்லப்போனா எங்களுக்கு இதை கண்டுகொள்ள நேரம் இல்லை. தீபாவளிக்கு படம் வரணும், நெறய வேலைகள் இருக்கு. இப்போ கூட ரசிகர்கள் டீஸர் கேட்டுட்டே இருக்காங்க. அந்த ஒர்க்தான் போயிட்டு இருக்கு. ஆனா ஒரு விஷயம்... டீஸர் பார்த்து எல்லாரும் மிரண்டுருவாங்க. நான் பிராமிஸ் பண்றேன்.

 

archana kalapathi with vijay



ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை ரசித்தீர்களா?

நான் அந்த லான்ச்ல ரொம்ப அலைஞ்சிட்டு இருந்தேன். விழா ஏற்பாடு வேலைகளில் மூழ்கியிருந்தேன். சங்கீதா அக்காதான் என்னை 'ஏன் இப்படி அலைஞ்சுக்கிட்டே இருக்க, இங்க வா... உக்காரு'ன்னு கூப்பிட்டு பக்கத்துல உக்காரவச்சாங்க. கரெக்ட்டா சார் பேசிய போதுதான் உக்காந்தேன். அவர் ரொம்ப ஜாலியா பேசினார், எனர்ஜி நல்லா இருந்தது. வெளியில் பல விதமா சொல்றாங்க, ஆனா படம் குறித்துதான் பேசினார். படத்தை பார்க்கும் போது, அவர் பேசியதன் அர்த்தம் உங்களுக்கு புரியும். அவர் சர்ச்சைக்காக, விளம்பரத்துக்காக பேசுறார்னு எல்லாம் சொல்றாங்க. அப்படி பேசித்தான் இந்தப் படம் ஓடணும்னு அவசியமில்லை. படம், மிக சிறப்பாக வந்துருக்கு.

ரசிகர்களை உள்ளே அனுமதிக்க முடியாமப் போன பிரச்னை குறித்து..?

ஒரு ஆடியோ லான்ச் என்பது ஃபேமிலி கேதரிங் மாதிரி. படத்துல வேலை செஞ்ச எல்லாரையும் அழைத்து ரசிகர்களோடு கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி. அங்க படத்தில் பணியாற்றிய அனைவரையும் வர வச்சோம். நயன்தாராவால வர முடியல, வேற ஒரு படத்து ஷூட்டிங் போயிருந்தாங்க. அப்படி இரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் அடி வாங்குனதை எங்களால தாங்கிக்க முடியல. வெளியில் 10,000 பேர் கூடியிருந்தாங்க. உள்ளே 6000 பேருக்கு மேல் இருந்தாங்க. படத்தில் பணியாற்றியவர்களுக்கு, விநியோக உரிமை பெற்றவர்களுக்கு எல்லாம் கீழ, மேடைக்கு முன் டிக்கெட் கொடுத்தோம். கேலரியில் ரசிகர்களுக்குக் கொடுத்தோம். மிகச் சிறந்த ஈவண்ட் மேனேஜ்மண்ட் நிறுவனத்திடம்தான் பொறுப்பை ஒப்படைத்தோம். இவ்வளவு செய்தும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரிய மனவருத்தம். சிலர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கினதா கேள்விப்பட்டேன். நாங்க டிக்கெட் எல்லாமே இலவசமாகத்தான் கொடுத்தோம். எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் ஆடியோ லான்ச் டிக்கெட்டை விற்க மாட்டாங்க. தயவு செய்து காசு கொடுத்து வாங்காதீங்க. சிலர் நாங்க கொடுத்த டிக்கட்டை டூப்ளிகேட்டா தயார் செய்து வித்துருக்காங்க. அதை ஒரு அளவுக்கு மேல் தடுக்க முடியல. அதனால் போலீஸ் அந்த நடவடிக்கை எடுத்துருக்கு. விஜய் சார் ரசிகர்கள் அடி வாங்கியது, எனக்குப் பெரிய மனவருத்தம். நாங்க ஏதாவது தவறு செஞ்சிருந்தா மன்னிப்பு கேட்கிறோம். ரசிகர்கள் அடி வாங்குறது, இப்படி கஷ்டப்பட்டது எங்களோட நோக்கம் இல்லை, அப்படி நடக்குமென்று நாங்க நினைக்கவில்லை.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது.