Skip to main content

'தளபதி 65' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

Published on 21/06/2021 | Edited on 25/06/2021

 

vijay

 

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக 'கோலமாவு கோகிலா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 'தளபதி 65' எனத் தாற்காலிகமாகப் பெயரிட்டு பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிற்காக ஜார்ஜியா விரைந்தது. அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது.

 

இந்த நிலையில், 'தளபதி 65' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநரான நெல்சன் திலிப்குமார் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மேலும், ஜுலை 22ஆம் தேதியான நாளைய தினம் நடிகர் விஜய்யின் பிறந்தநாளாகும். அதனை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

விஜய்யின் பிறந்தநாளான நாளை, 'பீஸ்ட்' படம் குறித்த கூடுதல் அப்டேட்டோ அல்லது விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 குறித்த அறிவிப்போ வெளியாகலாம் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.