thakar bachan about ilaiyaraaja and his symphony live concert

இசைஞானி இளையராஜா கடந்த ஆண்டு 35 நாட்களில் எதுவும் கலக்காத ஒரு முழு சிம்பொனியை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் அவர் உருவாக்கியுள்ள முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இன்று (08.03.2025) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினர். மேலும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்கள் எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

அதே போல் திரைப்பிரபலங்களில் சிவகார்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்தினார். மேலும் கமல், ரஜினி உள்ளிட்ட பலர் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். இந்த வரிசையில் தற்போது ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் தங்கர் பச்சான் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வணிக வெற்றி அடைந்த திரைப்படப்பாடல்களில் இருந்தும் வெற்றி அடையாத சில படப்பாடல்களைக்கொண்டும் அவரின் திறமையை நாம் மதிப்பிடுகின்றோம்! இருநூறு முன்னூறு திரைப்பாடல்களையே மீண்டும் மீண்டும் கேட்டு விட்டு நாம் வியந்து போகின்றோம்!

படத்தின் பெயர் அறியாத, மக்களுக்குத் தெரியாத நடிகர்கள் நடித்தப் படங்களில்தான் இளையராஜா மிகச்சிறந்த இசையை வடித்திருக்கிறார்! மீண்டும் மீண்டும் கேட்டு இன்புற வேண்டிய இசைக்கோர்வைகள் அவ்வாறானப் படங்களில்தான் கொட்டிக்கிடக்கின்றன! பொதுவாகவே புகழ் பெற்ற நடிகர்கள் நடிக்கும் அதிக முதலீட்டு படங்களில் புதுமைகளையும்,பரிசோதனை முயற்சிகளையும் கலைஞர்களால் கையாள முடிவதில்லை. சிறிய எளிய படைப்புகளிலேயே அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisment

இளையராஜா என்பவர் திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் ஒரு இசை அமைப்பாளர் என்பதையும் தாண்டி உலக இசைமேதைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு பேராளுமை என்பதை நாம் அறியத் தவறி விட்டோம்! இலண்டன் மாநகரில் இன்று அரங்கேறும் முதல் சிம்பொனி இசைக்கோர்வைத் தொகுப்பு இளையராஜாவை இந்தியாவைக்கடந்து உலகம் முழுமைக்கும் கொண்டு செல்லும் காலத்தைதாண்டிய காவியப்படைப்பாக இருக்க வேண்டும் என்பது என் பேராசை” எனக் குறிப்பிட்டுள்ளார். தங்கர் பச்சான் இயக்கத்தில் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.