Skip to main content

முடங்கியது தமிழ் சினிமா !

Published on 16/03/2018 | Edited on 17/03/2018
theatre

 

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இதனால் தியேட்டர்களில் பழைய படங்களையே மீண்டும் திரையிட்டு வருகிறார்கள். மேலும் 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும், மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில், சென்னையில் உள்ள தியேட்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நாளை வழக்கம்போல் சென்னையில் உள்ள தியேட்டர்கள் மற்றும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கும். 147 தியேட்டர்களில் படங்கள் ஓடும். இந்த தியேட்டர்களில் வழக்கம்போல் 4 காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து  இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திரையுலக பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. அரசாங்கத்திடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை பற்றி, எந்த சாதகமான பதிலும் வராததால், நாளை முதல் சென்னையை தவிர தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை காலவரையின்றி மூடுவதாக அறிவித்திருக்கிறார்கள்.

 

இதுபோல் இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விஜய்யின் 62வது படம், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடங்க இருந்த அஜித்தின் புதிய படம் உள்பட பல்வேறு புதிய படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வருகிற 23ந்தேதி முதல் வெளியூர், வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் தமிழ்ப்பட உலகம் முழுவதும் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. திரை உலகை நம்பி 2 லட்சம் பேர் நேரடியாக வேலை செய்கிறார்கள். 3 லட்சம் பேர் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். இந்த வேலைநிறுத்தம் காரணமாக 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள் என்று திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஸ்ட்ரைக் எப்போது முடிவுக்கு வரும் என்று தொழிலாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக்... முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அரசு ஏற்பாடு! 

Published on 05/04/2018 | Edited on 06/04/2018
theater


கடந்த 1ஆம் தேதி முதல் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்து பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக கோட்டைக்கு ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்போவதாக விஷால் அறிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடெங்கும் காவிரி பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடப்பதால் கோட்டைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று இரவு அமைச்சர் கடம்பூர் ராஜுவை அவரது வீட்டில் சென்று சந்தித்தார்.உடன் பெப்சி தலைவர் செல்வமணி, தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, இணை செயலாளர் கதிரேசன் ஆகியோர் உடன் சென்றனர். அப்போது தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உதவ வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். பிறகு இது குறித்து  அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியபோது... "அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். திரைப் பட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது" என்று உறுதி அளித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய விஷால்...."திரை உலகினர் பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாளில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் ராஜு உறுதி அளித்துள்ளார். மேலும்  இதன்மூலம் எங்கள் கோரிக்கைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

Next Story

பட அதிபர்கள் ஸ்ட்ரைக்....தெலுங்கு படங்களுக்கும் சிக்கல்

Published on 04/04/2018 | Edited on 05/04/2018
theater


திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடந்து வருவதால் திரையரங்குகளிலும் புதிய படங்கள்  எதுவும் வெளியாகாமல் பழைய படங்களையே திரையிட்டு வருகின்றனர். இதையடுத்து தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்கள் மட்டுமே அவ்வபோது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஞாயிறு முதல் தமிழகத்தில் தெலுங்கு படங்கள் வெளியாகாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இனி தெலுங்கு படங்களும் தமிழ்நாட்டில் ஓடாத காரணத்தினால், சமீபத்தில் இங்கு வெளிவந்து நல்ல வசூல் பார்த்து வரும், ரங்கஸ்தலம், சல் மோகன் ரங்கா, எம் எல் ஏ ஆகிய படங்களுக்கு வசூல் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.