thadi balaji meet nanguneri student chinnadurai

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியானது. அதில் கொடூர தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார். இந்தத் தேர்வில் அவர், தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளியல் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியில் - 85, கணினி அறிவியல் - 94 என மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து பா.ரஞ்சித், மாணவர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாராட்டி, சின்னதுரைக்கு புத்தகங்கள் வழங்கினார். இப்படி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் சின்னதுரைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் காமெடி நடிகர் பாலாஜி, திருநெல்வேலிக்கு சென்று, சின்னதுரையை அவரது வீட்டில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisment

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல விஷயங்களைக் கடந்து சின்னதுரை இந்த விஷயத்தை பண்ணியிருக்கார். பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று அவரது குடும்பத்தினருக்கு பெருமை சேர்த்து கொடுத்திருக்கார். எல்லாத்தையும் விட பெரிய விஷயம், முதல்வரை சந்தித்த பின் அவர் கொடுத்த பேட்டியில் சொன்னதுதான். தன்னை தாக்கியவர்களும் தன்னை மாதிரி பெரிய அளவில் படிச்சு, ஒரு இடத்துக்கு வர வேண்டும் எனசொன்னது. அந்த ஒரு பதிலுக்காகவே அவரை பார்க்க வேண்டும் என வந்தேன். எல்லாத்தையும் விட முதல்வர் சின்னதுரையை அழைத்து, அனைத்து விதமான உதவிகளையும் செய்வதாக சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி” என்றார். மேலும் சின்னதுரை மற்றும் அவரது குடும்பதினருக்கும் எந்த உதவி வேண்டுமானாலும் தன்னால் முடிந்ததை செய்வேன் என உறுதியளித்தார்.