Skip to main content

"அரசியலில் நுழைகிறேன்" - தாடி பாலாஜி பேட்டி

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

thadi balaji about his political entry

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார். மேலும் தமிழ் பாடத்தில் நந்தினியை தவிர்த்து லக்‌ஷயாஸ்ரீ என்ற மாணவி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று பலரது கவனத்தை ஈர்த்தார். 

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனம் பச்சையப்பன் மெட்ரிக் பள்ளியில் படித்த லக்‌ஷயாஸ்ரீக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் தாடி பாலாஜி மாணவியை ஃபோனில் அழைத்துப் பாராட்டிய நிலையில் மாணவியின் இல்லத்திற்கு சென்று நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாணவியின் பெயரில் லட்சியம் இருக்கிறது. கண்டிப்பாக அவரது லட்சியம் நிறைவேறும் என்று நினைக்கிறேன். அவரது மேற்படிப்புக்கு என்னால் இயன்ற உதவியை செய்வதாக உறுதியளித்திருக்கிறேன். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று பலரும் சொல்லி வரும் சூழலில் தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்த லக்‌ஷயாவை பாராட்டுவது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார். 

 

மேலும், "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நிறைய நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறார். குறிப்பாக நம்முடைய முதலமைச்சர் முழு மூச்சோடு இருக்கிறார். இந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்தி அடுத்தகட்டத்திற்கு போக வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார். அப்போது அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தாடி பாலாஜி, "நான் முன்பு சொன்னது போல விரைவில் வருவேன். வந்தால் கண்டிப்பாக நிறைய நல்லது பண்ணுவேன். கூடிய விரைவில் அதை முறையாக அறிவிப்பேன். தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஐடியா இல்லை. எனக்கான ஒரு சின்ன அங்கீகாரம் கிடைக்கும் கட்சியில் பணியாற்றத் தயாராகவுள்ளேன்" என்றார். 

 

பாலாஜி, நித்யா என்பவரை திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். நித்யா அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஏன் அவுங்க உயிரோட இருக்காங்க" - முதல்வரிடம் கை கூப்பி கோரிக்கை வைத்த தாடி பாலாஜி

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

thadi balaji about thiruthanai issue

 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பறைகளின் இரும்பு கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசியிருந்தனர். மேலும் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியிருந்தனர். இதனை கண்டித்து அங்கிருந்த மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்ப தற்போது நடிகர் தாடி பாலாஜி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த செய்தியை கேட்கும் போது உடம்பே கூசுது. இதுங்க என்ன ஜென்மம். இதுங்க எல்லாம் ஏன் உயிரோட இருக்காங்கனு புரியவில்லை. நீங்க அந்த பள்ளியில் படிச்சிருக்கலாம். அல்லது உங்க குழந்தை அந்த பள்ளியில் படிக்கலாம். 

 

யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இப்படி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், 6 அறிவு உள்ளவர்களா இல்லை 5 அறிவு உள்ள மிருகமா. இதெல்லாம் எவ்வளவு கேவலமான விஷயம். எவ்ளோ பெரிய தப்பு. குழந்தைகளுடைய படிப்பு கெடுது. இன்றைய சூழலில் அரசு பள்ளிகள் சிறந்த பள்ளி என்று நிறைய இடத்தில நானே பேசியிருக்கிறேன். கண்கூடாக பார்த்திருக்கிறேன். 

 

முதலில் ஒரே ஒரு விஷயம் நினைச்சிக்கங்க. நம்ம முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு குழந்தை சாதிச்சது என்றால், தான் சாதித்தது போல் அக்குழந்தையை அழைத்து கொண்டு பாராட்ட கூடிய நல்ல மனம் கொண்ட மனிதர் அவர். இந்த சூழலில் இப்படி நீங்கள் பண்ணினால் எவ்ளவு கேவலமா இருக்கு. இது எவ்ளோ பெரிய தவறு. நான் முதல் முறையாக தமிழக முதலமைச்சரை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற குற்றங்கள் நடக்க கூடாது. அதுவும் உங்க ஆட்சியில் நடக்க கூடாது. 

 

அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் என்னுடைய சப்போர்ட் எப்போதுமே இருக்கும். விரைவில் அந்த பள்ளிக்கு நேரடியாக வந்து பார்க்கிறேன்" என்றார்.   
 

 

 

Next Story

சி.பி.எஸ்.சி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு; மாநில அளவில் வேலூர் மாணவி முதலிடம்

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

Vellore student topper in Tamil Nadu with 497 marks out of 500 in CBSE 12th exam

 

நடந்து முடிந்த 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பள்ளிகளின் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஷிருஷ்டி என்கிற தனியார் பள்ளியை சேர்ந்த ரேஹா சுந்தரேசன் ராஜ் என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்களும் ஆங்கிலம், கணிதம், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 100க்கு தலா 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 

 

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ஷிருஷ்டி பள்ளி குழும தலைவர் சரவணன் உட்பட ஆசிரியர்கள் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர். தனது உயர்வுக்கு காரணமான ஆசிரியர்களுக்கு மாணவி நன்றி தெரிவித்துக்கொண்டார். மாநில அளவில் 2வது இடத்தில் சென்னை பத்ம ஷேஷாத்ரி பள்ளியியும், 3வது இடத்தில் கோபாலபுரம் DAV பள்ளியும் வந்துள்ளன.