சமந்தாவிற்காக ஒன்று திரண்ட திரை பிரபலங்கள்; பின்வாங்கிய அமைச்சர்

Telangana minister konda surekha apologises for Samantha divorce issue

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. பின்பு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். அதன்படி தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். சமந்தா தற்போது சிட்டாடெல் வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடர் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த சூழலில் தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா விவகாரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ்தான் காரணம் என சமீபத்திய பேட்டியில் பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரபல நடிகர் மற்றும் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜூனா, “உங்கள் எதிரிகளை விமர்சிப்பதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்ப பெறுங்கள்” என கண்டனத்தை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நாக சைத்தன்யா, சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், நானி, என பல்வேறு தெலுங்கு திரை பிரபலங்களும் தங்களது கண்டனத்தை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் கொண்ட சுரேகாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். அதோடு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமந்தா இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், எனது விவகாரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது என்றும் அதில் எந்த அரசியல் சதியும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். இதையடுத்து அமைச்சர் கொண்டா சுரேகா, தனது கருத்தை வாபஸ் பெறுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது கருத்துகளின் நோக்கம், ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதைக் கேள்வி கேட்பதுதான். மற்றபடி சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது அல்ல. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் எனக்கு ஒரு அபிமானம் மட்டுமல்ல, ஒரு இலட்சியமும் கூட. எனது கருத்துக்களால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ புண்பட்டிருந்தால், எனது கருத்துகளை வாபஸ் பெறுகிறேன். வேறு எதையும் நினைக்க வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

samantha Ruth Prabhu telungana
இதையும் படியுங்கள்
Subscribe