
கரோனாவால் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் தற்போதுதான் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
இதற்கான அரசாணையில் படப்பிடிப்புகளில் குறைவான நபர்களே கலந்துகொள்ள வேண்டும் என்றும், அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்குகள் திறப்பதற்கான எந்த அறிவிப்பையும் தெலங்கானா அரசு வெளியிடவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என முதல்வர் சந்திரசேகர் ராவிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி வீட்டில் அமைச்சர் ஒருவருடன் முக்கியமான திரைப்பிரபலங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் தெலங்கானா தலைமைச் செயலர் மற்றும் அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ் ஆகியோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அரசு அறிவுறுத்திய நெறிமுறைகளின்படி படப்பிடிப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.