
அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஈ5 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தங்கர் பச்சன் வழங்குகிறர். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்திற்கு அரசியல் தலைவர்களை அழைத்து படக்குழுவினர் திரையிட்டு வருகின்றனர். அந்த வகையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து படக்குழுவினரை வாழ்த்தினர். இதனிடையே அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட சில பா.ஜ.க. நிர்வாகிகள் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தை படக்குழுவினருடன் பார்த்துள்ளனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கிறது. நல்ல படம் என்று சொல்வதை விட நல்ல பாடம் என்று சொல்லலாம். படமே பாடமாக இந்த சமூகத்திற்கு மாறியிருக்கிறது. பெரிய உண்மையை நிகழ்த்தியிருக்கிறது.
சாதி பெருசா சாமி பெருசா என்று ஆசாமிகள் கேட்டுக்கொண்டிருப்பது தான் இந்தக் கதையின் கரு. எதுவுமே பெருசில்லை, அனைவருமே சமம் என பெருங்கோபத்தோடு படக்குழுவினர் உணர்த்தியிருக்கிறார்கள். தங்கர் பச்சனுக்கும் அவரது மகன் விஜித் பச்சானுக்கு எனது வாழ்த்துக்கள். விஜித் பச்சன் ஒரு நல்ல வாரிசாக உருவாகியிருக்கிறார். அரசியலில் வாரிசுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு. திரைத்துறையில் ஆதரவு. தங்கர் பச்சன் டிஎன்ஏ அப்படியே அவரது மகனுக்கும் வந்திருக்கிறது. இந்த படக் கதையை வெறும் சாதாரணக் கதையாக பார்க்காமல் சமுதாயத்துக்கு சொல்லப்படும் பாடமாக பார்த்து இன்னும் நிறைய திரையரங்குகளில் வெளியிட வேண்டும். இது மக்கள் மனமாற்றும் ஒரு விருது, தொழில் நுட்பத்துக்கு ஒரு விருது. ஆக இரண்டு விருதுகளை இந்தப் படம் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார். அப்போது அவரிடம் கீழடி தொடர்பாக ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழிசைக்கு அருகில் இருந்த தங்கர் பச்சன் கோபப்பட்டுப் படத்தை பற்றி மட்டும் பேசுங்கள் என கூறினார்.