Skip to main content

"படம் ரிலீஸாகி 3 நாட்களுக்கு பிறகே விமர்சனம் எழுத வேண்டும்" – தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

tamil film producers council takes a 20 new resolution

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இந்த ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டத்தை நேற்று (18.09.2022) நடத்தியது. சென்னை தேனாம்பேட்டை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமை வகித்தார். மேலும் துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ்ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

இந்த பொதுக்குழு கூட்டத்தில் இருபது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அகில் முக்கியமானவை சில, 

 

1. திரைப்பட விமர்சனங்கள், அதன் வெளியீட்டு தேதியில் இருந்து மூன்று நாட்கள் கழித்து சமூக வலைதளங்களில் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

 

2. திரையரங்குகளில் படம் பார்த்தபின் கருத்து கேட்பதற்காக கேமராக்களை திரையரங்குகளுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொள்கிறது 

 

3. டிக்கெட்டுகளை சென்டர்லைஸ் சர்வர் மூலம் மானிட்ரிங் செய்து டிக்கெட் விற்பனை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

 

4. சிறுமுதலீட்டு திரைப்படங்களை சங்கத்தின் வர்த்தக அறக்கட்டளை மூலம் ஓடிடி தளத்தில் வெளியிட்டு தயாரிப்பாளர்கள் பயனடையும் வண்ணம் வழிவகை ஏற்பாடு செய்யப்படும்.

 

5. திரைப்படங்களையும், நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறாக செய்தி பரப்பும் ஊடகவியலாளர்களுக்கு எந்தப் பேட்டியும் தருவதைத் திரைத்துறையினர் தவிர்க்குமாறு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்த தீர்மானத்தில், மூன்று நாள் கழித்து படங்களின் விமர்சனங்கள் எழுதுவது தொடர்பாக ஒரு கருத்து நிலவி வருகிறது. அதாவது, யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படம் வெளியானது முதல் நொடிக்கு நொடி விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பல திரைப்படங்கள் வணிக ரீதியாக படுதோல்வி அடைகிறதாக சொல்லப்படுகிறது. மேலும், திரைப்படங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் வெளியாவதால்,ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியானால், அது படத்தின் வசூலை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும்’ - தயாரிப்பாளர் சங்கம்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
tamil film active producers association demand Ticket prices should be reduced

சிறு பட்ஜெட் படங்களை பொதுமக்கள் திரையரங்கு வந்து பார்ப்பதை இலகுவாக்க, டிக்கெட் கட்டணங்களை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு திரையரங்கு, மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் ஆகிய நிர்வாகிகளுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 

இது தொடர்பாகத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நவம்பர் 2023 முதல், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருவது குறித்து தங்களின் குரல் பதிவைக் கேட்டோம். இந்த விஷயம் தயாரிப்பாளர்களையும் மிகவும் பாதித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். குறிப்பாக சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை பெரும்பாலான பார்வையாளர்கள் திரையரங்குகளில் பார்த்து நல்ல வசூல் தரும் போக்கு குறைந்து வருவது அனைவருக்கும் கவலை தருகிறது. விதிவிலக்காக சில சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு மட்டும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. ஆனால் அவ்வாறு எப்போதாவது வரும் வெற்றி நம் இரு தரப்பினருக்கும் போதாது.

சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பு இதை மனதில் வைத்து நாம் இரு சங்கங்களும் சேர்ந்து சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது. நல்ல திரைப்படங்களை, சரியான விளம்பரங்களுடன் கொடுப்பது தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றால், திரையரங்கில் அத்தகைய படங்களைப் பார்ப்பது அதிகம் செலவாகிற விஷயம் என்று மக்களிடம் உள்ள பொதுவான ஒரு எண்ணத்தை உடைப்பது திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்பு. சென்னையில் ரீ-ரிலீஸ் என்ற முறையில் சில முக்கிய படங்களை திரையரங்கில், குறைந்த டிக்கெட் கட்டணத்தில் வெளியிட்டு கமலா திரையரங்கம் நல்ல சாதனைகளைப் புரிந்துள்ளது. குறைந்த டிக்கெட் கட்டணங்கள் பார்வையாளர்களைக் கவர்கின்றன என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

இதை முன்னுதாரணமாக வைத்து சிறு பட்ஜெட் படங்களை பொதுமக்கள் திரையரங்கு வந்து பார்ப்பதை இலகுவாக்க, டிக்கெட் கட்டணங்களை மாற்றி அமைத்து பிப்ரவரி 23 முதல் வெளியாகும் படங்களுக்கு தாங்கள் வசூலிக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த ஒரு மாற்றம், மக்கள் மத்தியில் மீண்டும் திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட வாய்ப்பு உள்ளது” என குறிப்பிட்டு ஒரு அட்டவணையை வகுத்துள்ளது. அந்த பட்டியலை மேற்கோள் காட்டி, “அந்த டிக்கெட் கட்டணங்களை விட அரசு அனுமதித்துள்ள டிக்கெட் கட்டணங்களை தான் வசூலிக்க வேண்டும். குறைத்து வசூலிக்க வேண்டாம் என்று எந்த தயாரிப்பாளராவது (சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர் உட்பட) கடிதம் கொடுத்தால், அதை திரையரங்குகள் பின்பற்ற வேண்டும். அவ்வாறு கடிதம் எதுவும் தராத பட்சத்தில், இங்கே பரிந்துரைத்துள்ள குறைந்த டிக்கெட் கட்டணங்களைத் தான் அனைத்து தரப்பு படங்களுக்கும் திரையரங்குகள் வசூலிக்க வேண்டும். 

தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இணைந்து டிக்கெட் கட்டணங்களை குறைத்து உள்ளார்கள் என்ற செய்தி ஊடங்களில் பரவும்போது, அது பொதுமக்களிடையே நல்ல ஒரு எண்ணத்தை உண்டாக்கும். அதன் மூலம், திரையரங்குகளுக்கு மக்கள் வரும் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட எங்களின் இந்த பரிந்துரையை ஏற்று ஒரு முடிவெடுத்து எங்களுக்கு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம். வரவிருக்கும் பொதுத் தேர்தல் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல சிறு பட்ஜெட் படங்கள் தான் வெளியாக வாய்ப்பு உள்ளது. மே மாதம் முதல் தான் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும். இந்த சூழ்நிலையில், நாம் டிக்கெட் கட்டணங்களை குறைத்துள்ளோம் என்ற நல்ல செய்தியை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களை திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களை பார்க்க வைக்க வேண்டும். எங்களின் இந்த திட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

ரஜினி, கமலை மீண்டும் சந்தித்த சங்க நிர்வாகிகள்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
rajini kamal invited to kalaignar 100

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து ஜனவரி 6 ஆம் தேதி கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

இந்த நிலையில் ‘கலைஞர் 100’ விழாவிற்கான அழைப்பிதழை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு தமிழ் திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழங்கினர். இதற்கு முன்னதாக இந்த விழா கடந்த மாதம் 24ஆம் தேதி திட்டமிடப்பட்டு, மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கபட்டது. இதனால் ஏற்கனவே ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கிய சங்க உறுப்பினர்கள் தற்போது நிகழ்ச்சி ஒத்திவைக்கபட்டுள்ளதால் மீண்டும் புதிய அழைப்பிதழை வழங்கினர்.