தயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கு - நீதிமன்றம் புது உத்தரவு

tamil film Producers council Election Case Courts New Order

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது 'தேனாண்டாள் ஸ்டுடியோஸ்' முரளி ராமசாமி தலைமையில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் நிலையில், தற்போது 2023 - 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வரும் 26.3.2023 அன்று நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தயாரிப்பாளர் கவுன்சிலின் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை ரத்து செய்யக் கோரியும் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்துதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடந்த ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க கவுன்சில் செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கானது நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலுக்கான இரண்டாவது தேர்தல் அலுவலராக ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டார். மேலும் தேர்தலுக்கு பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையை அணுகலாம் எனவும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அது சம்பந்தமான அறிக்கையை ஏப்ரல் 3வது வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

chennai high court Tamil Film Producers Council
இதையும் படியுங்கள்
Subscribe