
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் ‘தக் லைஃப்’ படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவின் போது தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்து கர்நாடகாவை கொதி நிலையில் ஆழ்த்தியது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் எந்த மொழியில் இருந்து எது வந்தது என்று மொழி வல்லுநர்கள் சொல்லட்டும் என சொல்லி ‘அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது’ என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் தொடர்ந்தது. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி நாக பிரசன்னா கமல் தரப்பிற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் மன்னுப்பு கேட்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என தெரிவித்தார்.
பின்பு கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கமல் கர்நாடக திரைத்துறை சம்மேளன தலைவருக்கு எழுதிய கடிதத்தை நீதிபதி முன் படித்து காட்டினார். பின்பு அதில் என்னுடய (கமல்) பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து வழக்கறிஞர் தீமையாக இருந்தால்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் தீமை எதுவும் இல்லை என்றார். தொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட விரும்பவில்லை, திரைப்பட சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒருவாரம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கர்நாடக வர்த்தக சபை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், “நாங்கள் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை சுமூகமாக வெளியிட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படத் துறைகள் பல ஆண்டுகளாக இணக்கமாக செயல்பட்டு வரும் நிலையில், கன்னடத்தைச் சேர்ந்த பல நடிகர்கள் தமிழில் நடிக்கிறார்கள். தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கன்னடத் துறையில் படங்களைத் தயாரிக்கின்றனர். இரு திரைப்படத் துறைகளுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எந்தவொரு ஒரு தலைப்பட்ச செயலையோ அல்லது முடிவையோ திரைப்படச் சபை தவிர்க்க வேண்டும். இது சம்பந்தமாக, தக் லைஃப் திரைப்படத்தின் மீதான தடையை நீக்கி, ஜூன் 5, 2025 முதல் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
கமல்ஹாசன் கூறிய கருத்து, கன்னட மொழியின் மீதான அன்பின் காரணமாகவே தவிர, அந்த மொழியைப் பேசும் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் கன்னட மொழியின் முக்கியத்துவத்தையோ மதிப்பையோ குறைக்க அல்ல. கோகில்ட், புஷ்பகோ விமானா போன்ற படங்களாலும், பல படங்களாலும் கன்னட சினிமா துறைக்கும் கமல்ஹாசன் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார், மேலும் அங்குள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களால் அவர் மிகவும் மதிக்கப்படுகிறார். தமிழ் மற்றும் கன்னட மொழிகளுக்கு இடையே நிலவும் இந்த சகோதரத்துவ உறவு குறித்து கமல்ஹாசன் இன்று உங்களுக்கு எழுதிய கடிதத்தில் விளக்கமளித்தார். அந்த உணர்வை மனதில் கொண்டு, கர்நாடகாவில் தனது திரைப்பட வெளியீட்டிற்கு உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை நிறுத்துவது அல்லது ஒத்திவைப்பது இரு திரைப்படத் தொழில்களுக்கும் இடையே நிலவும் இணக்கமான உறவை நிரந்தரமாக சேதப்படுத்தும், மேலும் வரும் ஆண்டுகளில் இரு திரைப்படத் தொழில்களையும் பாதிக்கும் விளைவுகளுக்கு வழிவகுக்கும். அண்டை வீட்டாராக இருப்பதால், நாம் இருவரும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கிறோம், ஒன்றாக வாழவும் வேலை செய்யவும் வேண்டியிருக்கிறது. எனவே, படத்தை சுமூகமாக வெளியிட அனுமதிக்குமாறும், இந்த சூழ்நிலையில் உங்கள் சகிப்புத்தன்மையையும் பெருந்தன்மையையும் காட்டுமாறும் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம். இது இரு திரைப்படத் துறைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு நீண்ட தூரம் செல்லும்” என்றார். முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதராவ அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.