Skip to main content

தமிழ் சினிமா vs ’ப்ளூ சட்டை’ மாறன்?

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

“ஏம்பா.. புதுசா ஒரு படம் வந்திருக்குல்ல.. எப்படியிருக்கு? நல்லாயிருக்கா? பார்க்கிற மாதிரி இருக்கா?” 

- தொடர்ந்து புது சினிமாக்களைப் பார்க்கும் வழக்கமுள்ள நண்பர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான் முன்பெல்லாம் தியேட்டருக்குச் செல்வார்கள். காலப்போக்கில், நல்லவிதத்தில் பத்திரிக்கைகளின் விமர்சனம் இருந்தால் மட்டுமே, புது ரிலீஸ் சினிமாக்களைப் பார்த்தார்கள். இப்போதெல்லாம், வெப்சைட் விமர்சனம், தனிநபரின் யூ டியூப் விமர்சனங்கள் ஆர்வமாக கவனிக்கப்படுகின்றன.  ஆனாலும், ‘படம் சொதப்பல். என்னத்தயோ எடுத்திருக்காங்க..’என, விமர்சனத்துக்கு ஆளாகும் சினிமாக்களை, ‘எதற்கு ரிஸ்க்?’ என்று தவிர்க்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனாலும், எந்த விமர்சனத்தையும் பார்க்காமல், படிக்காமல் சினிமாவுக்குச் செல்பவர்களே அனேகம் பேர்.

 

blue sattai maran



சரி, விஷயத்துக்கு வருவோம். பிரபுதேவா நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தை ப்ளூ சட்டை மாறன் என்பவர், தனது தமிழ் டாக்கீஸ் யூட்யூப் சேனலில் கடுமையாக விமர்சனம் செய்த விவகாரம், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரால் காவல்துறையில் புகார் செய்யப்படும் அளவுக்கு சீரியஸாகிவிட்டது. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’படம் வெளிவந்த போது, அந்தப் படத்தை தரக்குறைவாக விமர்சித்ததாக ‘ப்ளூ சட்டை’ மாறனை பல மேடைகளில் கண்டித்துப் பேசினார் அந்தப் படத்தின் இயக்குனர் சாய் ரமணி. அஜித்தின் ‘விவேகம்’ படம் வெளியான போது படத்தைத் தாண்டி அஜித்தை விமர்சித்தார் மாறன். அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவரை கடுமையாக சாடி வந்தனர், நேரிலும் தேடி வந்தனர். இந்த விசயத்தில் மாறனைக் கண்டித்து இயக்குனர் விஜய் மில்டன், ‘ஈட்டி’இயக்குனர் ரவி அரசு உள்ளிட்ட சிலர் வீடியோ வெளியிட்டனர். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ படத்தை இவர் விமர்சித்த விதம் குறித்து கோபம் கொண்ட கிருத்திகா, மாறனின் ரிவ்யூவை தான் ரிவ்யூ செய்து ஒரு வீடியோவை மாறனின் தமிழ் டாக்கீஸ் யூட்யூப் சேனல் வாயிலாகவே வெளியிட்டார். இப்படி அவ்வப்போது நடக்கும் பிரச்சனை இப்போது போலீஸ் வரை சென்றுள்ளது. இந்த எதிர்மறை பிரபலம் மாறனுக்கு சாதகமாகவும் ஆகிறது. இன்றளவிலும் ‘விவேகம் விமர்சனம்’ அவரது சேனல் டாப்லிஸ்ட்டில் தொடர்கிறது.

 

motta siva ketta siva



சார்லி சாப்ளின் 2 குறித்து, யூ டியூபில் காணப்படும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தில் ஒரு பகுதி இது -

“படத்துல கோபம் வற்ற மாதிரி காமெடி பண்ணி வச்சிருக்கானுங்க. இந்தப் படத்தை எடுத்தவங்க அரையும் குறையுமா அப்டேட் ஆயிருக்காங்க. ரெண்டுங்கெட்டானா அப்டேட் ஆகி உசிர எடுக்கிறாங்க. ஒன்றரை மணி நேரம் வாட்ஸப் மெசேஜை அழிக்கிறத பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க. ஆனா.. இப்ப ஒரு ஆப்ஷன் வந்திருச்சு. டெலிட் ஃபார் எவரி ஒன்ங்கிற ஆப்ஷன்ல, தவறா அனுப்பிய மெசேஜை அழிச்சிட முடியும். அதைவிட்டுட்டு, ஹீரோயின் போன்ல இருக்கிற மெசேஜை அழிக்கிறதையே  ஒன்றரை மணி நேரம் படமா எடுத்து வச்சிருக்காங்க. இந்த மாதிரி விஷயமெல்லாம் வந்தபிறகு, இப்படி ஒரு படம் எடுத்து ஒன்றரை மணி நேரம் வறுத்து எடுத்துட்டாங்க”

”பிரபுதேவா கதையெல்லாம் கேட்கிறாரா? இல்லையான்னு தெரியல. இஷ்டத்துக்கு நடிக்கிறாரு.  இந்தப் படத்துல ஒரு பாட்டு ஹிட் ஆயிருச்சு. அந்தப் பாட்டுக்காக இந்தப் படத்தை ஒருவாட்டி பார்க்கலாம்னு ஒரு கோஷ்டி சொல்லிக்கிட்டுத் திரியுது. பொல்லாதவன் படத்துல சந்தானம் சொல்வாப்ல. சிங்கிள் டீக்கு ஆசைப்பட்டு உசிர விட்றாதன்னு. அதைத்தான் நாங்களும் சொல்லுறோம்.” என்று வார்த்தைகளால் சார்லி சாப்ளின் 2-வை வறுத்தெடுக்கிறார் மாறன்.

இந்தப் படத்தின் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் அளித்திருக்கும் பேட்டியில் -   

“சார்லி சாப்ளின் 2-வை பார்த்துட்டு ரிமேக் கேட்டிருக்காங்க. எப்படி ஒரு தனிப்பட்ட ஆளு சினிமாவ கிண்டல் கேலி பண்ணுவான்?  தமிழ்த் திரையுலகமே ப்ளூ சட்டை மாறனுக்கு எதிரா திரும்பியிருக்கு.  ப்ளூ சட்டை மாறனைத் தமிழ் சினிமா விடாது. விமர்சனம் பண்பட்டதா இருக்கணும்; புண்படுத்துவதா இருக்கக்கூடாது. எனக்கு கோடிக்கணக்கான வியூவர்ஸ் இருக்காங்கன்னு ரொம்ப தெனாவட்டாவும் கேவலமாவும் பேசினாரு மாறன். ஒரு படத்தைக் காலி பண்ணனும்னே பேசிக்கிட்டிருக்காரு. பத்துகோடி ரூபாய் செலவழிச்சு எடுத்த படத்த பார்க்கக்கூடாதுன்னு சொல்லுறதுக்கு ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு உரிமை கிடையாது. படம் சூப்பர் ஹிட்டா ஓடிக்கிட்டிருக்கு. எல்லா தியேட்டர்லயும் ஹவுஸ்ஃபுல்லா ஓடிக்கிட்டிருக்கு. மக்கள் படத்தை தலைமேல தூக்கி வச்சிட்டு கொண்டாடிக்கிட்டிருக்காங்க.” என்கிறார்.

தயாரிப்பாளர் அம்மா க்ரியேஷன்ஸ் டி.சிவா, தன்னுடைய பேட்டியில் -

“அவருடைய சப்ஸ்கிரைபர்ஸை ஏத்துறதுக்காகவும், சம்பாதிக்கிறதுக்காகவும் பண்ணுறாரு. இந்த மாதிரி ஆளுங்களுக்கு விளம்பரம் கொடுப்பதோ, கையூட்டு கொடுப்பதோ கூடாது. காசு கொடுத்தா ஒண்ணு பேசுறது. கொடுக்கலைன்னா ஒண்ணு பேசுறதுன்னு இருக்காரு. காமெடி படத்துல லாஜிக் மீறல் இருக்கத்தான் செய்யும்.” என்று ஆவேசம் காட்டுகிறார்.

 

charlie chaplin 2

தயாரிப்பாளர் சிவா - ஷக்தி சிதம்பரம் - பிரபுதேவா



கொலை மிரட்டல்?

சார்லி சாப்ளின் 2 தரப்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்திருக்கும் புகாரில் ‘படத்தை யூ டியூபில் விமர்சனம் செய்வதற்கும், அதில் விளம்பரம் செய்வதற்கும் பெரும்தொகை கேட்டார் மாறன். நாங்கள் விளம்பரமோ, பணமோ தரமாட்டோம் என்று மறுத்துவிட்டோம். அதனால், விமர்சனம் என்ற பெயரில், தரக்குறைவான வகையிலும் ஒருமையிலும் பேசியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.  மேலும், அவர் கொலை மிரட்டலும் விடுத்தார்’ என்கிற ரீதியில் குறிப்பிட்டுள்ளனர். ப்ளூ சட்டை மாறனோ, “நான் யாரையும் மிரட்டவும் இல்லை; பணம் கேட்கவும் இல்லை” என்று மறுக்கிறார். ஒரு பக்கம் எதிர்ப்புகள் இருந்தாலும் இன்னொரு புறம் அவர் சேனல் மூலம் திரைப்படங்களை விளம்பரம் செய்யும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

பாகவதர் காலத்திலிருந்தே ரசிகர்கள் சந்தித்துவரும் சோதனை!

எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலேயே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சினிமாக்கள் வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்களிலும் தோல்விப் படங்கள் உண்டு. அட, ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களின் ‘அட்டர் பிளாப்’ படங்களும் வெளிவந்து ரசிகர்களை இம்சித்திருக்கின்றன. அதே நேரத்தில், தரமான சினிமாக்களும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. குப்பையான மசாலா படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. ஒவ்வொரு சினிமாவும் அந்தந்த காலக்கட்டத்தில், அதற்கேற்ற விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது. பிற்காலத்தில் இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜாவின் இசையை, ஆரம்பத்தில்  ‘தகர டப்பாவை உருட்டுகிறார்’ என்று விமர்சித்ததும் நடந்திருக்கிறது. ரசிகர்களைக் கவரும் வகையில் எத்தனையோ பிரபலமான பாடல்களைப் பாடியிருக்கும் அவருடைய குரலை, அவர் பாட ஆரம்பித்த காலத்தில் கடுமையாக விமர்சித்த முன்னணி பத்திரிக்கைகளும் உண்டு.

நல்ல இயக்குநர்; நல்ல நடிகர் என்று நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களைச் சோதனைக்கு ஆளாக்கும்போது, குமுறலோ, வசைச்சொற்களோ, விமர்சனமோ வெளிப்படத்தான் செய்யும். ஆனாலும், உள்நோக்கத்துடன் விமர்சகர்கள் யாரேனும் செயல்பட்டால், நிச்சயம் அது கண்டிக்கப்பட வேண்டியதே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் பிரபல நடிகர்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
prabhu deva stper hero movie minman

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் பிரபு தேவா. இரண்டு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். நடனத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. ஆனால் சமீபகாலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரபு தேவா. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இதையடுத்து மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் பிரபு தேவா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி கோட் படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. 

prabhu deva stper hero movie minman

இந்த நிலையில் பிரபு தேவாவிற்கு வாழ்த்து தெரிவித்து பட அறிவிப்பை அறிவித்துள்ளது ஒரு படக்குழு. மின்மேன் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக பிரபு தேவா நடிக்கிறார். கதை மற்றும் இயக்கத்தை பிரவீன் மற்றும் சதீஷ் என்பவர்கள் கவனிக்க, வசனம் மற்றும் திரைக்கதையை மதன் கார்கி கவனிக்கிறார். வினோத் செந்தில் தயாரிக்கும் இப்படத்திற்கு கஷ்யப் இசையமைக்கிறார். அறிவிப்பு வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.