சத்யராஜ் மகளின் புதிய இயக்கம்!

divya

பிரபல ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். உலகின் மிகப்பெரிய உணவுத் திட்டமான அக்‌ஷய பாத்திராவின் விளம்பரத் தூதுவராக இருக்கும் இவர், பல மருத்துவ முறைகேடுகளையும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

தற்போது கரோனா சமயத்தில் மக்கள் எப்படி மருந்துகளை வாங்க வேண்டும் என்பதை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், இந்தச் சமயத்தில் விவசாயிகளுக்கு நேரடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா சமீபத்தில் விவசாய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

திவ்யா ஊட்டச்சத்து துறையில் செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்றவர்களைக் கௌரவிக்க அமெரிக்காவில் நடைபெறவிருந்த விழா கோவிட் 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து திவ்யா கூறுகையில், “அமெரிக்க சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் செல்வின் குமார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் புத்திசாலி மாணவி கிடையாது ஆனால் கடின உழைப்பாளி. 'அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது' என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்குதான் என்பது நியாயம் கிடையாது. தமிழ் நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களும் கரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் உணவு தேவை” என்றார்.

divya sathyaraj sathyaraj
இதையும் படியுங்கள்
Subscribe