Skip to main content

"ரெண்டு வருஷ போராட்டம்; வெற்றிமாறன் கொடுத்த நம்பிக்கை" - டாணாக்காரன் அனுபவம் பகிரும் இயக்குநர் தமிழ்

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

taanakkaran director thamizh interview

 

போலீஸ்காரர்கள் என்றாலே கரடுமுரடானவர்கள், கடுமையானவர்கள் என்ற எண்ணம் பொதுவாக மக்கள் மத்தியில் உண்டு. நமது தமிழ்ப் படங்களும் காவலர்களை அப்படித்தானே பெரும்பாலும் உருவகப்படுத்தும். ரவுடிகளைக் கொல்லும் போலீஸ் படங்களையும், அண்டர்கவர் ஆபரேஷன் செய்யும் போலீஸின் கதைகளையும் அதிகம் பார்த்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு காவலர்களின் வாழ்க்கை குறித்த வித்தியாசமான ஒரு பரிமாணத்தை முன்வைத்துள்ளது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 'டாணாக்காரன்' திரைப்படம். சினிமா மீதான காதலால் காவல்துறை பணியிலிருந்து விலகி உதவி இயக்குநராக திரைப்பயணத்தை தொடங்கிய தமிழ், தனது முதல் படைப்பிலேயே காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் அரசியலை பேசி ரசிக்க வைத்திருக்கிறார். அசுரன், ஜெய்பீம் படங்களின் மூலம் நடிகராக நன்கு அறியப்பட்ட தமிழின் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.       

 

அதேபோல இப்படக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட 'ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற முயற்சியின் மூலம் தன்னலமற்ற உழைப்பை சமூகத்திற்காக வழங்கிய காவலர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர். காவலர்கள் தங்களின் பணிக்காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், வேலைக்காகத் தனிப்பட்ட முறையில் அவர்கள் செய்ய நேர்ந்த தியாகங்கள், அதனால் அவர்கள் சந்தித்த விளைவுகள், அவர்களின் குடும்ப மற்றும் பணி வாழ்க்கையின் சமநிலை போன்ற பல விஷயங்களை இம்முயற்சி மூலம் வெளிகொண்டு வந்துள்ளனர் படக்குழுவினர். 35 ஆண்டுகளாக விடுப்பே எடுக்காத போலீஸ்காரர், வேலை காரணமாகத் தனது குழந்தைகளின் மழலை பருவத்தை அனுபவிக்க முடியாத போலீஸ்காரர் எனப் பல நிஜக்கதைகளை இந்த 'ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ்' முயற்சி வெளிகொண்டுவந்துள்ள சூழலில், இப்படத்தின் இயக்குநர் தமிழிடம் படம் குறித்துப் பேசினோம். படத்தின் கதைக்கரு, படப்பிடிப்பு அனுபவங்கள், படத்திற்குக் கிடைத்த பாராட்டு போன்ற பலவற்றைக் குறித்து அவருடனான உரையாடல் பின்வருமாறு.

 

taanakkaran director thamizh interview

 

நடிகராக நன்கு பரிட்சயமான பிறகு தற்போது இயக்குநராக முதல் படம் வெளியாகி இருக்கிறது. அந்த உணர்வு எப்படி இருக்கிறது..?

நான் முதன்முதலாக வெற்றிமாறன் சார் கூட சேர்ந்தது விசாரணை படத்தில் தான். அதன்பிறகு வடசென்னை, அசுரன் அப்படின்னு போய்ட்டு இருந்தது. அப்போ என்னோட வேலைகளெல்லாம் நல்லாருக்குன்னு வெற்றிமாறன் பாராட்டுவார். அசுரன் பண்ணிட்டு இருக்கும்போதே டாணாக்காரன் கதை பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் ஜெய்பீம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என்னோட முதல் மேடை, முதல் புகழ், முதல் வெற்றி எல்லாமே ஒரு இயக்குநராகத்தான் கிடைக்கும்னு நினைச்சேன். ஆனால், அசுரன் மற்றும் ஜெய்பீம் மூலமா ஒரு நடிகராக எனக்கு இதெல்லாம் கிடைச்சுது. ஆனால், ஓர் இயக்குநராக கிடைத்த இந்த அங்கீகாரம்தான் எனக்கு பெரிய கொண்டாட்டம்.

 

வெற்றிமாறனிடம் பணியாற்றிய அனுபவம் இப்பட உருவாக்கத்திற்கு எவ்வளவு உதவியாக இருந்தது..?

ஒரு அழுத்தமான கதையை கமர்ஷியலா எப்படி கொடுக்கலாம்னு வெற்றிமாறன் யோசிப்பார். அதுதான் அவரோட சக்ஸஸ்க்கு காரணம். அதேமாதிரி தான் டாணாக்காரன் ஒரு அழுத்தமான கதைக்களமாக இருந்தாலும், அதை எப்படி கமர்ஷியலா கொடுக்கலாம்னு நான் யோசிச்சேன். ரொம்ப சிக்கலான சீன்கள் எடுக்கும்போதெல்லாம் அவரைத்தான் யோசிச்சு பார்ப்பேன். இந்த சீனை அவர் எப்படி எடுப்பாருன்னு யோசிப்பேன். அவர் நிறைய இடங்களில் சிங்கிள் ஷாட்ஸ் யூஸ் பண்ணுவார். நானும் அதே மாதிரி முக்கியமான இடங்களில் சிங்கிள் ஷாட்ஸ் யூஸ் பண்ணேன். எங்க அக்கா படம் பாத்துட்டு வந்து என்னை கட்டிப்பிடிச்சு அழுது 'படத்துல வெற்றிமாறனை உரிச்சு வச்சிருக்கய்யா'ன்னு சொன்னாங்க. அந்த வார்த்தையைக் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

 

காவலர்கள் பயிற்சியில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி படம் எடுக்கவேண்டும் என்ற யோசனை எப்படி ஆரம்பித்தது..?

என்னோட நண்பர்கள் நிறைய பேர் போலீஸ்ல இருக்காங்க. நாங்க எல்லாரும் அப்பப்போ சந்திச்சு பேசுவோம். அப்போ போலீஸ் ட்ரெய்னிங்ல நடந்தது பற்றி நிறைய சிரிச்சு சிரிச்சு பேசுவோம். அதை அப்படியே ஒரு காமெடி படமா எடுக்கணும்னு பிளான் பண்ணிதான் ஆரம்பிச்சோம். ஆனால், இதை ஆழமா பார்த்தா அது காமெடியா இருக்காது. அவங்களுக்கும் வலி, வேதனை, பிரச்சனைகள் எல்லாமே இருக்கும். நாம தினமும் பார்க்கக்கூடிய போலீஸ்காரங்களுக்கு எதிராக எக்கச்சக்கமா கேள்விகள் எழுப்புறோம். ஆனால், சிஸ்டத்துக்குள்ள போலீஸ் எப்படி உருவாகுறாங்கன்னு எல்லாருக்கும் தெரியப்படுத்தணும். அதைப் பொதுத்தளத்துக்குக் கொண்டு வரணும்ன்னு எனக்கு தோணுச்சு. அதோட வெளிப்பாடுதான் டாணாக்காரன். 

 

ஓர் அறிமுக இயக்குநராக முதல் படமே காவல்துறையில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என்றபோது  தயாரிப்பாளர்களிடம் இருந்து என்ன மாதிரியான ரியாக்ஷன் வந்தது..?

இந்தக் கதையை மட்டும் ரெண்டு வருஷமா பலரிடம் சொல்லியிருக்கேன். இந்தக் கதையில் சொல்லப்படும் பிரச்சனையே பலருக்கு பிரச்சனையா இருந்தது. சிலருக்கு இதை எப்படி எடுக்கிறது அப்படிங்கிறதுல பிரச்சனை இருந்தது. இது எப்படி மக்களுக்கு புரியுமென்ற கேள்வி அவங்களுக்கு இருந்துச்சு. இப்படி ஒவ்வொரு கேள்விக்கு பதில் சொல்ற மாதிரி நான் எழுதிகிட்டே இருந்தேன். ரெண்டு வருஷம் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகளை மட்டும் பார்த்தேன். ஆனால், இது மக்கள்கிட்ட ஜெயிக்கும் அப்படின்னு நம்பிக்கையா முதன்முதலாகச் சொன்னது வெற்றிமாறன் தான். அதேபோல என்னை முழுமையா நம்பியது பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம்தான். படம் எடுக்கும்போது ஏற்பட்ட சிக்கல்கள் எல்லாத்திலும் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய துணையாக இருந்தது. 

 

இப்படி ஒரு கதையைப் படமா எடுக்கப்போறதா சொன்னப்போ உங்க காவல்துறை நண்பர்கள் என்ன மாதிரியான யோசனைகள் கொடுத்தாங்க..?

அவங்க எல்லாரையுமே உட்காரவச்சு நான் கதை சொன்னேன். அப்போ அவங்களுக்கு நடந்த விஷயங்களை என்னிடம் சொன்னாங்க. படம் ஆரம்பிச்ச பிறகு நான் சந்திக்கிற எல்லா போலீஸ் நண்பர்களிடமும் ட்ரெய்னிங் பற்றிக் கேட்பேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல பயிற்சி எடுத்திருப்பாங்க. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான கதைகள் இருக்கும். அதையெல்லாம் கேட்டு, அதுல சுவாரசியமா இருக்கிற நிகழ்வுகளைப் படத்தில் சேர்த்தேன். இந்தக் கதை என் நண்பர்கள் வாழ்க்கையில இருந்து எடுத்துன்னு கூடச் சொல்லலாம்.  

 

அசுரன், ஜெய்பீம் போன்ற படங்களில் நடிகராக உங்களுக்குக் கிடைத்த அனுபவம் இப்படத்தில் எப்படி பயன்பட்டது..?

டாணாக்காரன் எடுத்து முடிச்சிட்டுதான் ஜெய்பீம் நடிக்க போனேன். ஆர்ட்டிஸ்ட்களிடம் எப்படி வேலை வாங்கணும், அவங்களை எப்படி நடத்தணும் இதுமாதிரியான விஷயங்களை எல்லாம் வெற்றிமாறனிடம் இருந்துதான் கத்துக்கிட்டேன். அவர் எப்போதும் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க மாட்டார். அவங்களோட நடிப்பை மெருகேத்துறது மட்டும்தான் பண்ணுவார். நானும் அப்படித்தான். யாருக்கும் நடிப்பெல்லாம் சொல்லித்தரவே இல்லை. இதுல நடிச்ச எல்லாருமே பெரிய ஆட்கள். நான் சீன் என்னான்னு சொன்னதுமே அவங்க நடிச்சு காட்டுவாங்க. அதுவே நல்லாத்தான் இருக்கும். அப்படி இல்லைன்னா மட்டும் நான் சொல்லுவேன். இந்தப் படத்தில் நான் யாருக்கும் நடிப்பு சொல்லித்தரவும் இல்ல. என்னோட நடிப்பை நான் யார் மீதும் திணிக்கவும் மாட்டேன்.

 

சாத்தான்குளம் போன்ற சம்பவங்களால் மக்கள் மத்தியில் காவலர்கள் என்றாலே எதிர்மறை பார்வை உருவாகி இருக்கும்போது, அவர்களின் கஷ்டங்களைப் படமா எடுத்துருக்கீங்க. இதை மக்கள் எப்படி ரிஸீவ் பண்ணிப்பாங்கன்னு உங்களுக்கு தோணுச்சு..?

நான் அவங்களுடைய கஷ்டத்தை படமா எடுக்கல. போலீஸ்காரங்க எப்படி உருவாக்கப்படுறாங்க அப்படிங்கிறதைதான் எடுத்திருக்கேன். நாம காவல்துறை மேல வைக்கும் விமர்சனங்களுக்குப் பின்னால் என்ன மாதிரியான காரணங்கள் இருக்குன்னு ஆராயணும் இல்லையா..? காரணத்தைக் கண்டுபிடிச்சாதானே பிரச்சனையைத் தீர்க்க முடியும். அதுக்கான விவாதத்தை இந்தப் படம் ஏற்படுத்தணும்னு நினைச்சேன்.

 

 

சார்ந்த செய்திகள்