சத்யராஜ் நடித்த 'அடாவடி' படத்தை தயாரித்த ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.சரவணா தயாரிக்க, ராசுமதுரவன், மனோஜ்குமார், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த மாணிக்க வித்யா இயக்கியுள்ள படம் ‘தண்ணிவண்டி’. நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சம்ஸ்கிருதி நடித்துள்ளார். பாலசரவணன், தம்பிராமையா, தேவதர்ஷினி, வினுதலால், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலரை இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் வெளியிட்டார். அப்போது இயக்குநர் டி.ராஜேந்தர் பேசியபோது...
"ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் ஒரு பெரிய நிறுவனம் ஏ.வி.எம் நிறுவனம். அவர்கள் இன்று ஓ.டி.டி தளத்தில் கால் பதிக்கிறார்கள் என்றால் இது காலத்தின் கட்டாயம். அடுத்த கட்டம் ஓடிடி தளம் என்பதால், நான் கூட ஒடிடி தளம் துவங்குவேன். எதற்கு என்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குநர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கும் தேவை ஒரு தளம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம். தியேட்டரில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். ரெயிலில் கூட ஃபர்ஸ்ட் க்ளாஸ், செகண்ட் க்ளாஸ் இருக்கிறது. சினிமா தியேட்டரில் மட்டும் எல்லாம் ஒரே சீட்டு! இது என்ன சர்வதிகார நாடா, இல்ல ஜனநாயக நாடா. டிக்கெட் 100,150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்தோடு படம் பார்க்க முடியும்.
டிக்கெட் ரேட்தான் அதிகமென்றால், பாப்கார்ன் விலை 150 ரூபாய். ஆந்திராவில் இன்றும் படம் ஓடுகிறது என்றால் 50 ரூபாய், 70 ரூபாய்தான் டிக்கெட். டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும் என்று பேசுவதற்கு ஏன் யாருக்கும் துணிவில்லை, மனமில்லை. டிக்கெட் விலையைக் குறைத்தால் சிறிய படங்கள் வாழும். நாங்கள் ஏன் லோக்கல் வரி 8 சதவீதம் கட்ட வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். படம் பார்க்க மக்கள் 50% தான் வர வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி மட்டும் முழுமையாக கட்ட வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் இன்று பேசுவதற்கு 'தண்ணிவண்டி' படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா அமைந்தது. அனைவருக்கும் நன்றி" என்றார்.