சுசாந்தின் கடைசி படம்... ரிலீஸ் தேதி வெளியீடு!

ssr

எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.

'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

அவரது மரணத்தைத்தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள், கிளர்ச்சிகள் உருவாகியுள்ளன என்றே சொல்லலாம். பலரும் சுசாந்தின் மரனம் தற்கொலை அல்ல கொலை, ஹிந்தி சினிமா துறையிலிருக்கும் வாரிசுகளால் ஒதுக்கப்பட்டதால்தான் இந்த முடிவை எடுத்துகொண்டார் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுசாந்த் நடித்து வெளியாக இருந்த கடைசி படம் ‘தில் பேசாரா’ படம் ஜூலை 24ஆம் தேதி நேரடி டிஜிட்டல் ரிலீஸ் செய்யப்படும் என்று டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்னும் ஆங்கில நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கில படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இப்படம். ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுசாந்திற்கு மரியாதைச் செலுத்தும் விதமாக இந்தப் படத்தை இலவசமாக வெளியிடுகிறது டிஸ்னி ப்ளஸ் நிறுவனம்.

Sushant Singh Rajput
இதையும் படியுங்கள்
Subscribe