
எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப்பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதனிடையே அவரது உடல் மும்பையிலுள்ள வைல் பார்லே என்னும் இடத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் பங்குகொண்டனர். ஸ்ரெத்தா கபூர், கிரிதி சனோன், ராஜ்குமார் ராவ், விவேக் ஓபராய், ஏக்தா கபூர், வருண் சர்மா, ரன்வீர் ஷெராய், ரியா சக்கரவர்த்தி போன்ற பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில், ஞாயிறு அன்று சுஷாந்த் மறைந்த செய்தியைக் கேட்டதிலிருந்தே, அவரது சகோதரர் அம்ப்ரேந்திர சிங்கின் மனைவி சுதா தேவி உணவு சாப்பிட மறுத்துள்ளார். உறவினர்கள் வற்புறுத்தியும் அவர் எதுவும் சாப்பிடவில்லை. சுஷாந்த் பிஹாரில் இருந்தபோது அவரது பக்கத்து வீட்டில் இவர் குடும்பம் வசித்துள்ளது. ஏற்கனவே உடல்நலம் குன்றியிருந்த சுதா தேவி, உணவும் உட்கொள்ளாததால் திங்கட்கிழமை மாலை ஐந்து மணி அளவில் உயிரிழந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)