2டி நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பலரது பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா 2ஆம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனாபரவல் குறைந்ததால் படக்குழு காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியது.
இந்நிலையில்இயக்குநர் பாண்டிராஜ், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.