திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும் சுமார் 1400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் (இன்று) ஜூலை 2ஆம் தேதி ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்யக் கடைசி நாளாகும். இதனால் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்... "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல... #cinematographact2021 #FreedomOfExpression இன்று கடைசி நாள். தைரியமாக உங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்யுங்கள் !!" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.