
‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வந்தார் சூர்யா. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக இருந்து பின்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கமிட்டாகியுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு கோவையில் பூஜையுடன் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சூர்யாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க, லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ஷிவதா, நட்டி, சுப்ரீத் ரெட்டி மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இப்படம் குறித்து சமீப காலமாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் குறித்த அப்டேட் வெளியாகவுள்ளதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சூர்யா தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.