கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு கோடையில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையில் சூர்யாவின் புதுப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக இருந்து பின்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு கோவையில் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்து படக்குழுவினர் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கதாநாயகியாக த்ரிஷா நடிப்பதாக அறிவித்திருந்தனர். அதோடு த்ரிஷா திரைத்துறைக்கு வந்து 22 ஆண்டுகளை கடந்துள்ளதால் அதனை கேட் வெட்டி கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தில் லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவதா ஆகியோர் இணைந்துள்ளதாக அடுத்தடுத்து அப்டேட்டுகளை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து இன்று நட்டி, சுப்ரீத் ரெட்டி மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடிப்பதாகவும் சண்டை பயிற்சியாளராக விக்ரம் மோர், படத்தொகுப்பாளராக கலைவாணன் மற்றும் புரொடைக்ஷன் டிசைனராக அருண் வெஞ்சரமூடு இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர் அப்டேட்டுகளால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.