Skip to main content

“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன?”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 

suresh kamatchi

 

 

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய சுரேஷ் காமாட்சி, “ இயக்குனர் திரு பத்து படங்களை எடுத்தவர் போல மிக சிறப்பாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். த்ரிஷாவின் திரைத்துறை பயணத்தில் இது ஒரு சிறந்த படமாக அவருக்கு அமையும். 

இங்கு நாங்களெல்லாம் தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள். நட்பின் ரீதியாக இந்த படத்தின் விழாவிற்கு வந்துள்ளோம். ஆனால், இந்த படத்தில் நடித்தவர்கள் ஏன் வரவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் சிறந்த நடிகர்கள் என்று தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. ரஜினி, விஜய் உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்களே வருகிறார்கள். உங்களுக்கு வருவதற்கு என்ன? 

நீங்களெல்லாம் ஒரு பிரபலம் என்றுதானே படத்தில் சம்பளம் கொடுத்து நடிக்க வைக்கிறோம். இப்படி நீங்கள் சினிமா விளம்பரத்திற்கு வரவில்லை என்றால் செய்தியாளர்கள் எதை கவர் செய்வார்கள். அப்படியென்றால் எதற்கு உங்களுக்கு காசு கொடுத்து நடிக்க வைக்கிறோம், ஆயிரம் புதுமுகங்கள் வருகிறார்கள். அவர்களை நடிக்க வைக்க தெரியாதா? உங்களை எல்லாம் வளர்த்த செய்தியாளர்களையும், ரசிகர்களையும் சந்திப்பில் அப்படி என்ன சிக்கல் இருக்க போகிறது. இனியாவது படத்தில் நடிக்கும் பிரபலங்கள் அந்த படத்தின் விழாக்களில் கலந்துக்கொள்ளுங்கள். இது உங்களின் பொறுப்பு. இது என் பணிவாக வேண்டுகோள்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இறுதியில் தர்மமே வெல்லும்” - ‘உயிர் தமிழுக்கு’ அமீர்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Ameer Uyir Thamizhukku teaser released

இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அடுத்து வெளியான போஸ்டரில், 'இது தமிழகம் அல்ல... தமிழ்நாடு' எனக் குறிப்பிடப்பட்டது. மேலும் போஸ்டரில் மாநாடு கூட்டம் நடப்பது போலவும் அதற்காக மறைந்த தலைவர்கள் கலைஞர், மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட பேனர்கள் இருக்க நடுவில் அமீரின் பேனர் இடம்பெற்றிருந்தது. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.    

இதையடுத்து இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அமீர் கைதாவது போல் காட்சி இடம்பெற்றிருக்கும் நிலையில் அவர் பேசும், பணம், பதவி, பவரு... இந்த மூணெழுத்தையும் அனுபவிச்சது மாதிரி ஜெயில் என்ற மூணு எழுத்தையும் அனுபவிச்சா தான முழு அரசியல்வாதியாவ முடியும்” வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமீர் பேசும், “தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்” என்று இடம் பெறும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

“பாழாப்போன அரசியல் இப்படி பார்க்க வைத்துவிட்டதே” - கலங்கிய தயாரிப்பாளர்

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
producer suresh kamatchi about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதில் ஒரு ரசிகர் விஜயகாந்த்திற்குத் தனது உறுப்புகளைத் தரத் தயாராக இருப்பதாக வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் திரைப் பிரபலங்களும் அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பினார்.

இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேடையில் நாற்காலியில் அமர்ந்த அவர் திடீரென்று சரிந்து விழப் பார்த்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பதறியடித்தபடி அவரைப் பிடித்து உட்கார வைத்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து வேதனையடைந்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜயகாந்த் உடல் நலம் குறித்து எக்ஸ் தளத்தில் மனம் திறந்துள்ளார். அந்தப் பதிவில், “கேப்டன்... ஆரம்பத்துல எந்தக் கப்பல்ல கேப்டனா இருந்தாரு விஜயகாந்துன்னு கிண்டல் பண்ணவங்க... பின்னர்தான் புரிந்துகொண்டனர். அவர் சினிமாவில் சிதைந்து கிடந்த பல கப்பல்களை சரிசெய்தவர் என்று. அதன்பிறகு கிண்டலடித்த அதே வாய்கள் கேப்டன் கேப்டன் என வாயாரக் கூப்பிடத் தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவராக இருக்கும்போது அச்சங்கத்தை தலை தூக்கி நிறுத்தியவர் அவர். கலை நிகழ்ச்சியொன்றில் ரஜினி கமல் என நட்சத்திரப் பட்டாளங்களைக் கையாண்டு கடனையடைத்தவர். சொன்னதை செய்து காட்டுவதையே இலட்சியமாக வைத்திருந்தவர். 

நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில், வரிசையாக பேருந்துகள் அவர்களை ஏற்றிச் செல்ல வந்தபோது பல கலைஞர்கள் பஸ்ஸிலா? என தயங்கி நின்றபோது, ஒரு பேருந்திலிருந்து கையசைக்க ‘சூப்பர் ஸ்டாரே பேருந்தில்தான் போகிறாரா?  நாமும் ஏறிக்கொள்வோம்’ என பேருந்துகள் நிறைந்தன. இதன் பின்னால் விஜயகாந்தின் அதிபுத்திசாலித்தனமும் நிறைந்திருந்தது என சொல்லக் கேள்வி. எல்லா நடிகர்களும் பேருந்தில் ஏறந் தயங்குவார்கள் என அறிந்திருந்த விஜயகாந்த் சூப்பர் ஸ்டாரிடம், ‘நீங்க முதல்ல பேருந்தில் ஏறிட்டா அப்புறம் அனைவரும் ஏறிடுவாங்க’ என சொல்லியிருக்கிறார். ‘அதற்கென்ன ஏறிட்டாப் போச்சு’ என தனக்கேயுரிய பாணியில் சொன்னதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். 

தவிர, நடிகர் சங்கத்தில் ஒரு நடிகர் மீதோ, நடிகை மீதோ புகார் வந்தால் அழைத்து விசாரிப்பார். சம்பந்தப்பட்ட நடிகர் நடிகை மீது தவறு இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் சென்று மன்னிப்புக் கேட்டு சுமூகமாக அந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அனுப்பி வைப்பார். நடிகர் நடிகைகள் மீது தவறில்லை என்றால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நடிகர் சங்கம் வந்துதான் தீர்வு காண வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக நிற்பார். தன் உடன் பிறந்த சகோதரர்களாய் ஒவ்வொரு உறுப்பினரையும் மதித்தவர். நல்ல மனிதன் என அனைவரிடமும் பெயரெடுத்தவர். படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் சமமான, தரமான உணவு... யார் வந்தாலும் அடைக்கலம் என தன்னிகரற்ற மனிதராய் விளங்கியவர் கேப்டன். எல்லோரும் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க மறுத்தபோது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் எனவும், மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டவர். 

காவிரியில் நீர் தர கர்நாடகா மறுத்தபோது, அம்மாநிலத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துவோம் என குரல் கொடுத்து நெய்வேலி போராட்டம் நடந்தது. அப்போது 5,000  நடிகர்களை ஒன்று திரட்டி போராடியவர். அரசியலுக்கு முழுக்க தகுதியான மனிதர்... தகுதியான நேரத்தில் களமிறங்கி அதில் தனது கணக்கை அட்டகாசமாகத் தொடங்கியவர் உடல் நலத்தை விட்டுவிட்டார். உடல் நலம் பேணாததற்கு அரசியலே மிக முக்கிய காரணமாகிவிட்டது. எனக்கெல்லாம் மாபெரும் நம்பிக்கை இருந்தது கேப்டன் பழையபடி சிங்கமாக கர்ஜிக்க வந்துவிடுவார் என்று. ஆனால் சமீபத்திய அவரது காணொளியைப் பார்த்தபோது கண்ணீர்தான் வந்தது. பாழாப்போன அரசியல் அவரை இப்படி நம்மை பார்க்க வைத்துவிட்டதே எனக் கலங்கிப் போனேன். 

தவிடு பொடியாக்கும் ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைப் போல இருந்தவரை வீல் சேரில் வைத்து அரசியல் செய்ய அழைத்து வந்தபோது நெஞ்சே உடைந்துவிட்டது. மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்?  என குமைந்து போனேன். இந்த சமூகத்தோடு, அரசியல் எதிரிகளோடு, தன் உடல் நலத்தோடு எவ்வளவோ போராடிவிட்டார்! இன்னுமா போராட வேண்டும்? தான் எந்நிலையிலிருந்தாலும் போராடிக் கொண்டே இருப்பது சரியல்ல. இப்போதுதான் தலைமை மாறிவிட்டதே... இனியேனும் அவரை வதைக்காமல் பாதுகாத்து வைப்போம். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமோடு நம்மோடிருக்கட்டும் என்பதே என் ஒரே ஆசை. கேப்டன் உங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பல கோடி பேரில் நானும் ஒருவன். நலமே சூழ்க உம்மை” என குறிப்பிட்டுள்ளார்.